For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு-2 தைவான் நாட்டவர் காயம்-பாதுகாப்பு அதிகரிப்பு

Google Oneindia Tamil News

Jama Masjid
டெல்லி: டெல்லியில் இன்று காலை இரண்டு மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து வெளிநாட்டினர் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 தைவான் நாட்டு சுற்றுலாப் பயணிகள் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் டெல்லியில் பெரும் பதட்டம் நிலவுகிறது. அந்த மர்ம நபர்களைப் பிடிக்க வலை வீசப்பட்டுள்ளது. டெல்லியில் உச்சகட்ட உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை டெல்லியில் உள்ள ஜூம்மா மசூதியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்போது 3வது நுழைவாயிலுக்கு வெளியே ஒரு மோட்டார் சைக்கிள் மின்னல் வேகத்தில் இருந்தது. அதில் உட்கார்ந்திருந்த இரண்டு மர்ம நபர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட ஆரம்பித்தனர்.

இதில் இரண்டு தைவான் நாட்டு சுற்றுலாப் பயணிகள் காயமடைந்தனர். இருவரும் சுற்றுலாப் பேருந்திலிருந்து இறங்கிக் கொண்டிருந்தபோது குண்டு பாய்ந்து காயமடைந்தவர்கள் ஆவர். உடனடியாக இருவரும் லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இருவரும் அபாய கட்டத்தில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மர்ம நபர்கள் தங்களிடமிருந்து 38 ரக துப்பாக்கியால் பல ரவுண்டு சுட்டனர். இலக்கே இல்லாமல் சரமாரியாக சுட்டனர். இருவரும் ஹெல்மட் மற்றும் ரெயின்கோட் அணிந்திருந்தனர். அவர்கள் யார் என்பதும், எதற்காக சுட்டனர் என்பதும் தெரியவில்லை. இருவரையும் பிடிக்க டெல்லி முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இருவரும் ஒரு சுற்றுலாப் பேருந்தை குறி வைத்துத் தாக்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார். இருவரும் தப்பி ஓடும்போது துப்பாக்கியை கீழே போட்டு விட்டு ஓடியதாக தெரிகிறது.

பீதி வேண்டாம்-ஷீலா தீட்சித்:

இந்த சம்பவம் குறித்து டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் கூறுகையில், யாரும் பீதி அடைய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். நடந்த சம்பவம் குறித்து போலீஸ் கமிஷனரிடம் நான் விசாரித்துள்ளேன். குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவர் என்றார் அவர்.

பயமுறுத்தவே தாக்குதல்?

இதற்கிடையே காமன்வெல்த் போட்டி தொடங்க இன்னும் 2 வாரங்களே உள்ளதால், இந்த சம்பவம் பல நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. காமன்வெல்த் போட்டி தொடங்கவுள்ள நிலையில் மக்களை பீதிக்குள்ளாக்கவும், இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு வீரர், வீராங்கனைகளை அச்சுறுத்தும் வகையிலேயே இந்த தாக்குதல் நடந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

அதேசமயம், தீவிரவாதிகளுக்கு இதில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து டெல்லி காவல்துறையிடமிருந்து அறிக்கை கேட்டுள்ளது உள்துறை அமைச்சகம்.

காமன்வெல்த் போட்டியைப் பாதிக்காது-ஒருங்கிணைப்புக் குழு:

இந்த சம்பவத்தால் காமன்வெல்த் போட்டிகள் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்று போட்டிக்கான ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து போட்டி ஒருங்கிணைப்புக் குழு செய்தித் தொடர்பாளர் லலித் பனாட் கூறுகையில், டெல்லியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் காமன்வெல்த் போட்டிகள் பாதிக்கப்படாது.

நாட்டின் பாதுகாப்புப் படையினர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். போட்டியை பாதுகாப்பான முறையில் நடத்தவும், போட்டிக்காக வருகை தரும் வீரர் வீராங்கனைகள், அதிகாரிகளுக்கு போதுமான பாதுகாப்பு கொடுக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.

பாதுகாப்பை வலுப்படுத்த பாஜக கோரிக்கை:

இந்த நிலையில் டெல்லி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. அதேசமயம், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக் குழுவையும், மத்திய அரசையும் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மீது ஏ.கே.47 துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர்கள் ஜூம்மா மசூதி அருகே நடத்திய தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. டெல்லியின் பாதுகாப்புக்கு மத்திய அரசே முழுப் பொறுப்பாகும். காமன்வெல்த் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X