எனது பாதுகாப்புக்கு கருணாநிதி உத்தரவாதம் அளிக்காதது ஏன்-ஜெ.கேள்வி
மதுரை கூட்டத்தில் நான் பேசக்கூடாது என்று எனக்கு 4 மிரட்டல்கள் வந்துள்ளன. முதல் மிரட்டல் ஜெயா டி.வி. அலுவலகத்துக்கு வந்தது. தொடர்ந்து மிரட்டல்கள் வந்ததை அடுத்து தலைமை செயலாளரிடம் புகார் செய்துள்ளோம்.
மேலும் கட்சி நிர்வாகிகள் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்து தமிழ் நாட்டில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டதாக புகார் செய்துள்ளனர்.
எனக்கு வந்த மிரட்டல் கடிதங்கள் வித்தியாசமாக இருக்கிறது. இதனால் கட்சி தொண்டர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இந்த மிரட்டலை கண்டு நான் பயப்பட போவதில்லை. இந்த மிரட்டலுக்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன். திட்டமிட்டப்படி மதுரை நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன். என்ன நடந்தாலும் எனக்கு கவலை இல்லை. ஒருவருக்கு ஒருமுறைதான் மரணம் வரும் அது எப்போது வந்தாலும் பரவாயில்லை.
இதுபோன்ற மிரட்டல்களால் எனக்கு கவலையில்லை. திட்டமிட்டப்படி மதுரை கூட்டத்துக்கு செல்வேன்.
எனக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் என்று பிரதமர் உறுதி அளித்திருக்கிறார். ஆனால், எந்த ஆபத்தும் ஏற்படாது என்று முதலமைச்சர் உத்தரவாதம் அளிக்காதது விரோதம் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவுக்கு வரும் மிரட்டல்கள் வேண்டும் என்றே யாரோ செய்வது போல உள்ளது என்று முதல் இரு மிரட்டல்கள் குறித்து கருத்து தெரிவித்த காவல்துறை கூறியிருந்தது. பின்னர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு குறித்து செய்தித் தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் செய்து அரசு அறிவித்தது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாக டிஜிபி லத்திகா சரணும் விளக்கியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது மேலும் 2 மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளது. இதுகுறித்து நேற்று உள்துறைச் செயலாளரை சந்தித்து அதிமுகவினர் மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.