ராகுல் காந்தியுடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு-காங்கிரசில் சேருகிறார்?
பாஜகவில் தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்து பின்னர் அதிமுகவுக்கு வந்து சென்னை மைலாப்பூர் தொகுதி எம்எல்ஏ ஆகி, இப்போது திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தவர் எஸ்.வி.சேகர்.
விரைவில் திமுகவில் இணைவேன் என்றும் பேட்டி கொடுத்து வந்தார். திமுக தலைவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொண்டும் வந்தார். ஆனால் சமீப காலமாக அவரை எங்கும் காணவில்லை. திமுக தரப்பிலும் அவர் காணப்படவில்லை.
இந் நிலையில் திடீரென்று டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசியுள்ளார். இதனால் அவர் காங்கிரசில் இணையலாம் என்று தெரிகிறது.
ஆனால் இது குறித்து ஒரு பத்திரிக்கைக்கு சேகர் அளித்துள்ள பேட்டியில், எனது சமூக சேவைகளை ராகுலுக்கு இ-மெயில் மூலம் விளக்கி அவரை அனுமதி சந்திக்க விருப்பம் தெரிவித்தேன். அவரும் அழைத்து பேசினார்.
இது மரியாதை நிமித்தமான சநதி்ப்பு, தமிழக அரசியல் நிலவரம், இளைஞர் காங்கிரஸ் செயல்பாடு, கூட்டணிகள் ஆகியவை குறித்து என்னிடம் ராகுல் கேட்டறிந்தார்.
தேசிய கட்சியில் சேருவது தவறான செயல் அல்ல. உடனடியாக காங்கிரசில் சேருவேன் என்பது இல்லை. எந்த முடிவு எடுத்தாலும் மக்களுக்கு சொல்லி விட்டுத்தான் செய்வேன் என்று விளக்கம் தந்துள்ளார்.
குஷ்புவுக்கு முக்கியத்துவத்தால் அதிருப்தியா?
தன் மீதான அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் சேரத் திட்டமிட்டிருந்தார் நடிகை குஷ்பு. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென திமுகவில் சேர்ந்தார்.
அவரது வருகைக்குப் பிறகு குஷ்புவுக்கு திமுகவில் பெரும் முக்கியத்துவம் தரப்படுகிறது.
முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் குஷ்பு கலந்து கொண்டால் அவர்கள் அமரும் வரிசையில் இடம் தரும் அளவுக்கு முக்கியத்துவம் அதிகமாக உள்ளது.
இந்த களேபரத்தால், குஷ்புவுக்கு முன்பே ஜெயலலிதாவை கடுமையாக எதிர்த்துப் பேசி, விமர்சித்து வந்த எஸ்.வி.சேகருக்கு தரப்பட்டு வந்த முக்கியத்துவத்தை திமுக கிடப்பில் போட்டு விட்டதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட அதிருப்தியால்தான் திமுகவில் சேரும் எண்ணத்தை சேகர் கைவிட்டு விட்டாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.