கர்ப்பிணிகளிடம் வசூலிக்கப்பட்ட ரூ. 1.5 லட்சம் பணத்தை சுருட்டிய நர்ஸ்
சென்னை: சென்னை வேப்பேரியில் உள்ள மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணத்தில் ரூ. 1.5 லட்சத்தை மோசடி செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார் நர்ஸ் ஒருவர்.
இந்த மருத்துவமனையின் பிரசவ வார்டு பொறுப்பாளாராக இருந்து வருபவர் நிர்மலா. இது கட்டண வார்டாகும். இங்கு கர்ப்பிணிகளுக்கு சிசேரியானாக இருந்தால் ரூ. 2000 கட்டணம், சுகப் பிரவசமாக இருந்தால் ரூ. 600ம் வசூலிக்கிறார்கள்.
இந்தப் பணத்தை வசூலித்து கணக்கு வைக்க வேண்டியது நர்ஸ் நிர்மலாவின் பணியாகும். சமீபத்தில் இங்கு கணக்கு வழக்குகலை அதிகாரி சாருமதி ஆய்வு செய்தார். அப்போது பெருமளவில் மோசடி நடந்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து நிர்மலாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் கர்ப்பிணிகளிடமிருந்து வசூலித்த பணத்தில் ரூ. 1.5 லட்சத்தை மோசடியாக சுருட்டியது தெரிய வந்தது. இதையடுத்து நிர்மலா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பணத்தைத் திருப்பித் தர அவருக்கு அவகாசம் தரப்பட்டது. ஆனால் இழுத்தடித்து வந்தார் நிர்மலா. இதையடுத்து அவர் மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்த கொளத்தூரில் உள்ள நிர்மலாவின் வீட்டுக்குச் சென்றனர்.ஆனால் அவர் அங்கு இல்லை. தலைமறைவாகி விட்டார்.