ஜேப்பியார் கல்லூரியில் பெரும் வன்முறை: ஆய்வகத்துக்கு தீ
சென்னை: ஜேப்பியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் பெரும் வன்முறையில் ஈடுபட்டு கல்லூரி, விடுதி, ஆய்வகங்களை சூறையாடினர். 200க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் உடைக்கப்பட்டு, ஆய்வகத்துக்கு தீ வைக்கப்பட்டது.
இதையடுத்து கல்லூரியும் விடுதியும் 1 வாரம் மூடப்பட்டு மாணவ, மாணவிள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சென்னை அருகே சோழிங்கநல்லூர் செம்மஞ்சேரியில் ஜேப்பியார் பொறியியல் கல்லூரியும், இதன் வளாகத்திற்குள்ளேயே செயிண்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியும் உள்ளன.
சுமார் 6,000 மாணவ- மாணவிகள் படித்து வரும் இந்தக் கல்லூரிகளின் விடுதியில் 1,200 பேர் தங்கியுள்ளனர்.
ஜேப்பியார் கல்லூரி இயக்குனராக மரிய வில்சன் இருந்தார். சமீபத்தி்ல் ரெஜினா வில்சன் இயக்குனராக நியமிக்கப்பட்டார். கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் செல்போன் பேசக்கூடாது, மாணவர்கள் வெளியில் செல்லும்போதும் உள்ளே வரும்போதும் அடையாள அட்டையை காட்ட வேண்டும் என்பது உள்பச ரெஜினா சில கடுமையான விதிமுறைகளை அமலாக்கியதால், அதற்கு விடுதி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந் நிலையில் நேற்றிரவு விடுதி மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இயக்குனராக மீண்டும் மரிய வில்சனையே மீண்டும் நியமிக்க வேண்டும் என்றும் செல்போனில் பேச அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கோரினர்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி, விடுதி, ஆய்வகங்களை மாணவர்கள் சூறையாடினர். 200க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
விடுதியில் இருந்த படுக்கைகளுக்கும், ஆய்வகத்திற்கும் தீ வைத்தனர். மின் வயர்களையும் அறுத்து விடுதியில் மின்தடையை ஏற்படுத்தினர்.
போலீசார் விரைந்து வந்து மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அங்கு போலீஸார் குவிக்கப்பட்டு நிலைமை கடடுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த போராட்டத்தையடுத்து ஜேப்பியார் கல்லூரிக்கு ஒரு வாரம் விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுதியில் தங்கி இருந்த மாணவர்கள் அனைவரும் இன்று காலை வெளியேற்றப்பட்டனர்..
மீண்டும் கல்லூரிக்கு வரும்போது பெற்றோர்களை அழைத்து வர வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.