ஜேப்பியார் கல்லூரி வன்முறை: விடுதி மாணவர்கள் மீது வழக்குப் பதிவு
சென்னை: வன்முறையில் ஈடுபட்டு கல்லூரி, விடுதியை சூறையாடி, ஆய்வகத்துக்கு தீ வைத்த ஜேப்பியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரி விடுதி மாணவர்கள் கடந்த 3ம் தேதி கலவரத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரி வளாகத்தில் செல்போன் பேச அனுமதிக்க வேண்டும், கல்லூரி இயக்குனராக உள்ள ரெஜினா வில்சனை நீக்கிவிட்டு மீண்டும் மரிய வில்சனை இயக்குனராக நியமிக்க வேண்டும் என்றும் கோரி இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரியையும், விடுதியையும் ஆய்வுக் கூடத்தையும், கம்ப்யூட்டர்களையும் மாணவர்கள் அடித்து நொறுக்கி சூறையாடி தீ வைத்தனர். விடுதியில் இருந்த படுக்கைகளுக்கும், ஆய்வகத்திற்கும் தீ வைத்தனர். மின் வயர்களையும் அறுத்து விடுதியில் மின்தடையை ஏற்படுத்தினர்.
இதையடுத்து விடுதி மூடப்பட்டு கல்லூரிக்கு ஒரு வாரம் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந் நிலையில் சம்பவம் நடந்து 3 நாட்களுக்கு பிறகு கல்லூரி நிர்வாகம் செம்மஞ்சேரி போலீசில் புகார் செய்துள்ளது.
ஜேப்பியார் கல்லூரி மேற்பார்வையாளர் அலெக்ஸ் கொடுத்த புகாரில், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்திருப்பதாகவும், குற்றவாளிகள் யார் என்று அடையாளம் காணப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் 147, 148, 356, 4(1), 427 ஆகிய 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கல்லூரி நிர்வாகம் கொடுத்த புகாரின்படி விடுதி மாணவர்கள் 1,200 பேருமே இந்த கலவரத்திற்கு காரணமாக கருதப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
சுமார் 6,000 மாணவ- மாணவிகள் படித்து வரும் இந்தக் கல்லூரிகளின் விடுதியில் 1,200 பேர் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்லூரி மீண்டும் திறக்கப்படும்போது பெற்றோர்களை அழைத்து வர வேண்டும் என்று அனைத்து விடுதி மாணவர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.