தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு-கருணை மனு தாக்கல் செய்த 3 அதிமுகவினரின் தூக்குத் தண்டனை நிறுத்தி வைப்பு
வேலூர்: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 அதிமுகவினரும் கருணை மனு தாக்கல் செய்துள்ளதால் அவர்களது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதை வேலூர் மத்திய சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு கடந்த 2000மாவது ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கலவரத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி அருகே நடந்த கலவரத்தின்போது கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவ, மாணவியர் வந்த பேருந்தை நிறுத்தி அதை தீவைத்துக்கொளுத்தினர். இதில், கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய 3 மாணவிகள் உயிரோடு பரிதாபமாக எரிந்து இறந்தனர்.
இந்தக் கொடூர வழக்கில் அதிமுகவைச் சேர்ந்த நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மேற்கண்ட மூவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இதை சமீபத்தில் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
இதையடுத்து மூன்று பேரையும் அக்டோபர் 8ம் தேதி (நாளை) தூக்கிலிட்டுத் தண்டனையை நிறைவேற்றுமாறு விசாரணை நீதிமன்றமான சேலம் செஷன்ஸ்கோர்ட் உத்தரவிட்டது.
இதையடுத்து மூன்று பேர் சார்பிலும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பப்பட்டது. இந்த நடவடிக்கைகளை அதிமுகவே செய்தது.
இந்த நிலையில் தற்போது தூக்குத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில்,
தூக்கு தண்டனை கைதிகள் சார்பில் ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட கருணை மனு, சிறைத்துறை மூலமாக தமிழக அரசுக்கும், பின்னர் மத்திய அரசிற்கும் அனுப்பப்பட்டுவிட்டது.
தற்போது மத்திய அரசிடம் இருந்து, கருணை மனு குறித்து மறு உத்தரவு வரும் வரை தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கும்படி கடிதம் வந்துள்ளது. எனவே மறு தேதி குறிப்பிடாமல் தூக்குதண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
கருணை மனு குறித்து உள்துறை அமைச்சகம் மூலமாக குடியரசுத் தலைவர் இனி பரிசீலனை செய்வார். உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின்பேரி்ல அவர் இந்த மனு குறித்து முடிவு செய்வார். இருப்பினும் இதற்கென காலக்கெடு எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.