லத்திகாவுக்கு பதில் புதிய டிஜிபியை தேர்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக டிஜிபியாக லத்திகா சரண் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை டிஜிபி நடராஜ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் லத்திகா சரணை விட சீனியரானை தன்னைப் புறக்கணித்து விட்டு டிஜிபி நியமனம் நடந்துள்ளது. இதில் உச்சநீதிமன்ற நெறிமுறைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கில் தமிழக டிஜிபி அந்தஸ்தில் இருப்பவரும், தற்போது சிஆர்பிஎப் தலைவராக பதவியேற்றுள்ளவருமான விஜயக்குமார் தாக்கல் செய்த மனுவில், லத்திகா சரண் என்னை விட ஜூனியர். இந்தப் பதவிக்கு என்னையும் பரிசீலனை செய்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் (அப்போது மாலதி) உண்மைகள மூடி மறைத்துள்ளார்.
எனது சீனியரான நடராஜின் கோரிக்கையில் நியாயம் உள்ளது, அவரது கோரிக்கையை நான் ஆதரிக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்ட பதில் மனுவில், அனுபவம், திறமை அடிப்படையில்தான் லத்திகா சரண் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். சீனியாரிட்டிபடிதான் நியமிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றுகூறியிருந்தது.
செப்டம்பர் 7ம் தேதி நடராஜின் மனுவும், விஜயக்குமார் தாக்கல் செய்திருந்த பதில் மனுவும் விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த பெஞ்ச், தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது.
இன்று இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுகுறித்து நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று பிறப்பித்த உத்தரவில்,
உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நெறிமுறைகளுக்குட்பட்டு இந்த நியமனம் இடம் பெறவில்லை. டிஜிபி நியமனத்தில் உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நெறிமுறைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
டிசம்பர் முதல் வாரத்திற்குள் புதிய டிஜிபியை தமிழக அரசு தேர்வு செய்ய வேண்டும். இதற்கு வசதியாக தமிழக அரசு புதிய அதிகாரிகள் தேர்வுப் பட்டியலை தயாரித்து அதை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
பதவிக்கு தகுதியான ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை வரும் 26-ம் தேதிக்குள் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைத்துக்கு (யுபிஎஸ்சி) தமிழக அரசு அனுப்ப வேண்டும்.
நவம்பர் 30ம் தேதிக்குள் டிஜிபி பதவிக்கான அதிகாரியை யுபிஎஸ்சி தேர்வு செய்ய வேண்டும். அதுவரை லத்திகா சரணே டிஜிபியாக தொடரலாம் என அறிவித்தது.
லத்திகா சரண் கடந்த ஜனவரி மாதம் டிஜிபியாக நியமிக்கப்பட்டார். தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி என்ற பெருமையையும் அவர் பெற்றார். 1976ம் ஆண்டு பாட்ச் ஐபிஎஸ் அதிகாரி லத்திகா சரண்.












Click it and Unblock the Notifications