தங்கம் விலை கிடுகிடு... இன்று மட்டும் ரூ 98 உயர்ந்தது!
சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ 98 அதிகரித்துள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தபடி உள்ளது. வாரம் முழுக்க ஏறுமுகத்திலிருக்கும் தங்கத்தின் விலை, திடீரென்று ஒரு நாளில் லேசாகக் குறைவதும், பின்னர் அதைவிட பலமடங்கு உயர்வதுமாக உள்ளது.
இந்நிலையிலும், சென்ற செப்டம்பர் மாதத்தில் நாட்டின் தங்க இறக்குமதி, முந்தைய மாதத்தைக் காட்டிலும் 30 சதவீதம் அதிகரித்து 34.80 டன்னாக உயர்ந்துள்ளது. இது, இந்தியாவில் தனிநபர் செலவிடும் வருவாய் அதிகரித்து வருவதைக் காட்டும் அளவுகோலாக உள்ளது என்கிறார்கள் நிபுணர்கள்.
நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகைகளில் தங்கம் வாங்குவது அதிகரிக்கும் என்பதால்தான் செப்டம்பர் மாதத்தில் தங்கம் இறக்குமதி அதிகமாக உள்ளது.
இது குறித்து தங்கம், வெள்ளி வியாபாரிகள் சங்க நிர்வாகியொருவர் கூறுகையில், "தங்கம் விலை வரலாறு காணாத வகையில் ரூ.19,000-ஆக (10 கிராம்) அதிகரித்துள்ளது. இந்நிலையில், பண்டிகை காலங்களை முன்னிட்டு தங்கத்திற்கான தேவையும் அதிகரித்துள்ளது'' என்றார்.
இதேநிலை நீடித்தால், அக்டோபர் மாதத்திலும் தங்கம் இறக்குமதி அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சென்ற வாரத்தில், சர்வதேச அளவில் ஒரு அவுன்ஸ் (28.35 கிராம்) தங்கம் விலை 1,366 டாலராக (ரூ.61,470) உயர்ந்துள்ளது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது 10 கிராம் தங்கம் விலை சுமார் ரூ.21,682-ஆக உள்ளது. தங்கம் பயன்பாடு மற்றும் இறக்குமதியில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூயால் 1,825க்கு விற்கப்படுகிறது. பவுனுக்கு ரூ. 96 அதிகரித்து ஒரு பவுன் தங்கம் ரூ. 19620 க்கு விற்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications