கருணாநிதியுடன் சந்திப்பு: அரசியலில் எதுவும் நடக்கலாம்-ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

Ramdoss
சென்னை: அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று முதல்வர் கருணாநிதியை சந்தித்த பின் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த வேண்டும் என்று கோரி பல்வேறு சமுதாயத் தலைவர்களுடன் முதல்வர் கருணாநிதியை இன்று ராமதாஸ் சந்தித்துப் பேசினார்.

அவருடன் யாதவ மகாசபை தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன், தேவர் பேரவைத் தலைவர் ராமகிருஷ்ணன், நாடார் பேரவை பொதுச் செயலாளர் கரிக்கோல் ராஜ் மற்றும் முஸ்லீம், கிருஸ்துவர், உள்பட 27 சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் அவருடன் முதல்வரை சந்தித்துப் பேசினர்.

சந்திப்பின்போது பாமக தலைவர் ஜி.கே.மணி, அமைச்சர்கள் துரைமுருகன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோரும் உடனிருந்தனர்.

சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய ராமதாஸ்,

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக தமிழகத்தில் உள்ள 27 சமுதாய சங்கங்களைச் சேர்ந்த தலைவர்களுடன் முதல்வரை சந்தித்தேன். இந்த சந்திப்பு மகிழ்ச்சியாக இருந்தது.

எப்படி, எந்த வழிமுறைகளில், எந்த நேரத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது குறித்து எங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளோம். இது தொடர்பாக பேசிய முதல்வர், இதில் தனக்கு எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை என்றும், இதை தானும் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் முதல்வர் தெரிவித்தார்.

நாங்கள் கொடுத்த மனுவை படித்து பார்த்துவிட்டு, உடனடியாக தமிழக பிற்படுத்தப்பட்ட நல ஆணையர் நீதிபதி ஜனார்த்தனனுடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார் என்றார் ராமதாஸ்.

கேள்வி: இந்திய அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும்போது தான் தமிழகத்திலும் நடத்த முடியும் என்று முதல்வர் ஏற்கனவே கூறியிருந்தாரே?

ராமதாஸ்: 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு பிறகு தேசிய அளவில் கணக்கெடுப்பு நடைபெறும் என்று சொல்லியிருக்கிறார்கள். தனியாக ஆணையம் இந்த கணக்கெடுப்பை நடத்தும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதை நம்ப முடியாது. பாதியில் கூட அவர்கள் இதை கைவிட்டு விடலாம்.

மேலும் அந்த கணக்கெடுப்பு சமுக, பொருளாதார நிலைமைகளை உள்ளடக்கியதாக இருக்காது. ஆனால், அப்படிப்பட்ட கணக்கெடுப்பை நடத்த வேண்டிய அவசியம் உள்ளது.

கடந்த ஜூலை மாதம் 13ம் தேதி தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதில் ஜாதிவாரியான கணக்கெடுப்பை ஜூன் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருப்பதை முதல்வரிடம் வலியுறுத்தினோம். வெறும் தலைகளை எண்ணும் கணக்கெடுப்பால் பலன் இல்லை என்று தேசிய அளவில் சமுக ஆர்வலர்களும் கூறியிருப்பதையும் முதல்வரிடம் எடுத்துக் கூறினோம். அவர் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறோம்.

கேள்வி: இதற்கு கலெக்கெடு எதுவும் நிர்ணயித்திருக்கிறீர்களா?

ராமதாஸ்: 2011ம் ஆண்டு ஜனவரிக்குள், அதாவது நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதத்திற்குள் நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறோம். நீதிபதி ஜனார்த்தனனுடன் கலந்து பேசி முதல்வர் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகிறோம்.

கேள்வி: திமுக-பாமக இடையே மீண்டும் கூட்டணி உருவாகும் என்று செய்திகள் வெளியாகி உள்ளனவே?

ராமதாஸ்: பத்திரிக்கைகளில் தான் அப்படி செய்திகள் வருகின்றன. இன்று நாங்கள் அது பற்றி எதுவும் பேசவில்லை. இந்த சந்திப்பு அதற்காகவும் அல்ல. மிகவும் பின்தங்கிய மற்றும் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள் தங்கள் கோரிக்கைகளை அளிப்பதற்காக நடைபெற்ற சந்திப்பு இது.

கேள்வி: கூட்டணி தொடர்பாக மீண்டும் முதல்வரை நீங்கள் சந்திக்க வாய்ப்பு உண்டா?

ராமதாஸ்: அரசியலில் எதுவும் நடக்கலாம். ஆனால், இன்று நடைபெற்ற சந்திப்பு அதற்காக அல்ல என்றார் ராமதாஸ்.

இதற்கு முன் மதுக் கடைகளை மூட வலியுறுத்தி ஆன்மிகத் தலைவர்கள் உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்களுடன் முதல்வர் கருணாநிதியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார் ராமதாஸ்.

அவரது கோரிக்கையை ஏற்று, டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+