மெக்காவிற்கு சென்னையில் இருந்து 460 ஹஜ் பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டது
சென்னை: ஹஜ் பயணத்தின் முதல் விமானம் 460 பயணிகளுடன் சென்னையில் இருந்து புறப்பட்டது. ஹஜ் பயணிகளை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி.யும் வழியனுப்பி வைத்தனர்.
முஸ்லிம்களின் கட்டாய கடமைகள் 5. அதில் ஒன்றான ஹஜ் பயணத்தை அரபு மாதமான துல்ஹஜ்ஜில் மேற்கொள்வது வழக்கம். உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் சவுதி அரேபியாவில் உள்ள புனித இடமான மக்காவிற்குச் சென்று இறைவனை வழிபடுவார்கள். இந்த ஆண்டு தமிழகம், புதுவை, அந்தமானில் இருந்து 5022 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர்.
இதற்காக 11 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதில் முதல் விமானம் 460 பயணிகளுடன் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது.
தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், கவிஞர் கனிமொழி எம்.பி., அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், இந்திய ஹஜ் கமிட்டி துணை தலைவரும், தமிழக ஹஜ் கமிட்டி தலைவருமான அபூபக்கர், இந்திய குழு செயல் அலுவலர் டாக்டர் ஜாகீர் உசேன், தமிழக அரசு செயலாளர் அலாவுதீன் ஆகியோர் ஹஜ் பயணிகளை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
இது குறித்து துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது,
புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களை தமிழக முதல்வர் சார்பில் வழியனுப்பியதில் மிக்க மகிழ்ச்சி. தமிழகத்தில் கடந்த ஆண்டு வரை 2700 பேர் ஹஜ் பயணம் சென்றனர். ஆனால் இந்த எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதின் பயனாக தற்போது 4241 பேர் ஹஜ் செல்கின்றனர். அவர்கள் பயணம் நல்லவிதமாக அமைய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.