2வது நம்பிக்கை வாக்கெடுப்பு-வென்றார் எதியூரப்பா-ஆதரவு 106, எதிர்ப்பு 100

ஆளுநர் பரத்வாஜின் உத்தரவுப்படி இன்று கர்நாடக சட்டசபையில் 2வது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதில் பங்கேற்க தங்களை வாக்களிக்க அனுமதிக்கக் கோரி 5 சுயேச்சை எம்.எல்.ஏக்கள் விடுத்த கோரிக்கையை நேற்று கர்நாடக உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
16 பேர் தகுதி நீக்கத்தையடுத்து கர்நாடக உறுப்பினர்களின் எண்ணிக்கை 209 ஆக குறைந்தது. இதில் சபாநாயகரைத் தவிர்த்துப் பார்த்தால் 208 பேர். இதில் பெரும்பான்மையை நிரூபிக்க 106 பேர் தேவை. பாஜக தரப்பில் 105 பேரின் ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் பின்னணியில் இன்று முற்பகல் 11 மணிக்கு சட்டசபை கூடியது. பலத்த பாதுகாப்பு வெளியில் போடப்பட்டுள்ள நிலையில் சட்டசபைக்குள் எந்தவித பரபரப்பும், அமளியும் இன்று ஏற்படவில்லை. மாறாக மயான அமைதி காணப்பட்டது.
அவை கூடியதும் காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா எழுந்து பேசினார். விவாதம் நடத்த வேண்டும் என்று கோரினார். ஆனால் அதை சபாநாயகர் ஏற்கவில்லை. இதையடுத்து அரசு கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது.
தலையை எண்ணி வாக்கெடுப்பு:
முதலில் நம்பிக்கை தீர்மானத்திற்கு தெரிவிக்கும் எம்.எல்.ஏக்களை எழுந்து நிற்குமாறு சபாநாயகர் போபய்யா உத்தரவிட்டார். இதையடுத்து முதல்வர் எதியூரப்பா உள்ளிட்ட ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்றனர். அவர்களை சட்டசபை செயலக அதிகாரிகள் தலையை எண்ணி கணக்கெடுத்தனர்.
அவர்களோடு முதல்வர் எதியூரப்பாவும் சேர்ந்து தனது கட்சி எம்.எல்.ஏக்கள் எழுந்து நிற்கிறார்களா, எத்தனை பேர் எழுந்து நிற்கிறார்கள் என்பதை கணக்கிட்டுக் கொண்டார்.
இதையடுத்து நம்பிக்கை இல்லை என்று தெரிவிப்போர் எழுந்து நிற்குமாறு சபாநாயகர் போபய்யா கேட்டுக் கொண்டார்.இதையடுத்து சித்தராமையா உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் எழுந்து நின்றனர். அவர்களை அதிகாரிகள் கணக்கிட்டனர்.
இறுதியில் முடிவை அறிவித்தார் சபாநாயகர். அதன்படி நம்பிக்கை உள்ளது என்று ஆதரவு தெரிவித்தவர்கள் எண்ணிக்கை 105 பாஜக உறுப்பினர்கள் மற்றும் ஒரு சுயேச்சை என மொத்தம் 106 பேர்.
எதிர்த்து வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 100 ஆகும். இன்றயை வாக்கெடுப்பில் பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த தலா ஒரு எம்.எல்.ஏ பங்கேற்கவில்லை. அதன் பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பில் எதியூரப்பா அரசு வெற்றி பெற்றதாக அறிவித்தார் சபாநாயகர்.
இதையடுத்து எதிர்க்கட்சியினர் எழுந்து எதிர்த்துக் கோஷமிட்டனர். இருப்பினும் பெரியஅளவில் அமளியில் ஈடுபடவில்லை. மாறாக எதிர்ப்புக் கோஷமிட்டவாறே அனைவரும் வெளியேறினர். மறுபக்கம் பாஜகவினர் இரு விரல்களைக் காட்டி வெற்றி வெற்றி என்று கோஷமிட்டனர்.
அக்டோபர் 18 வரை 'திக் திக்'தான்:
இன்றைய வாக்கெடுப்பின் முடிவு என்னவாக இருந்தாலும், அது அக்டோபர் 18ம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றம், 16 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் பிறப்பிக்கும் உத்தரவுக்கு கட்டுப்பட்டதாகும் என்பதால், இன்று எதியூரப்பா தப்பியிருந்தாலும் கூட அது, அக்டோபர் 18ம் தேதி வரப் போகும் தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுக்கு சாதகமாக ஒரு வேளை தீர்ப்பு வந்தால் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருமாறு எதியூரப்பா பணிக்கப்படலாம் என்று தெரிகிறது. எனவே இன்றைய வாக்கெடுப்பு முடிவுகள் எதியூரப்பாவுக்கும், பாஜகவுக்கும் இறுதியானதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்பாராமல் கிடைத்த ஒரு ஓட்டு:
இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பாஜகவுக்கு எதிர்பாராமல் ஒரு சுயேச்சையின் ஆதரவு கிடைத்தது.
பாஜகவிடம் 105 உறுப்பினர்களே உள்ளனர். அனைவரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். அதேசமயம், கூடுதலாக ஒரு சுயேச்சையின் ஓட்டும் பாஜகவுக்குக் கிடைத்தது.
எதிர்க்கட்சித் தரப்பைப் பொறுத்தவரை காங்கிரஸுக்கு 72 வாக்குகளும், மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு 28 வாக்குகளும் கிடைத்தன.
பாஜகவிலிருந்து மேலும் சிலரை விலைக்கு வாங்க குமாரசாமி கடுமையாக முயன்று வருவதாகவும், சிலர் அதற்குப் படிந்துள்ளதாகவும் முன்னதாக கூறப்பட்டது. ஆனால் பாஜக எம்.எல்.ஏக்கள் இன்று ஒட்டுமொத்தமாக வாக்களித்துள்ளதன் மூலம் எதிர்க்கட்சி வரிசை பெரும் ஏமாற்றத்தையே சந்திக்க நேரிட்டது.
பலத்த பாதுகாப்பு:
இதற்கிடையே, இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பையடுத்து சட்டசபை வளாகமான விதான செளதாவில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவரும் தீவிரமாக சோதிக்கப்பட்டு அதன் பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். நம்பிக்கை வாக்கெடுப்பு தூர்தர்ஷன் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.












Click it and Unblock the Notifications