நெல்லையில் கல்லூரி மாணவர்கள் மோதல் : 8 பேர் கைது
நெல்லை: நெல்லையில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை டவுன் தென்பத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவரும், இவரது நண்பர்கள் முத்துகுமார், ஆறுமுகராஜ் ஆகியோர் பேட்டையில் உள்ள கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வருகின்றனர்.
இதே கல்லூரியில் படிக்கும் மூன்றாமாண்டு மாணவர்களான தேனீர்குளத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், அவரது நண்பர்களான கரையிருப்பைச் சேர்ந்த கந்தசாமி, தச்சநல்லூரைச் சேர்ந்த தியாகராஜன், திம்மராஜபுரத்தைச் சேர்ந்த பேராச்சமணி, தாழையூத்தைச் சேர்ந்த கருத்தமாணிக்கம் மற்றும் பல மாணவர்கள் பிரிவுசார்விழா கொண்டாடினர்.
இந்த விழாவிற்கு எங்களையும் ஏன் அழைக்கவில்லை என பிரசாந்த், முத்துகுமார், ஆறுமுகராஜ் ஆகியோர் பாலசுப்பிரமணியத்திடம் கேட்டுள்ளனர். இதனால் பாலசுப்பிரமணியன் கோஷ்டியினரும், பிரசாந்த் கோஷ்டியினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இது குறித்து பேட்டை போலீசார் விசாரணை நடத்தி பாலசுப்பிரமணியன், கந்தசாமி உள்பட 5 பேரையும், பிரசாந்த் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications