மதுரை: குண்டு வீசி இமாம் அலி கூட்டாளி-மீன் விற்பனையாளர்கள் கடும் மோதல்
மதுரை: மதுரை மதுரையில் உள்ள மீன் மார்க்கெட்டில் கடை போடுவது தொடர்பாக இமாம் அலி கூட்டாளியின் ஆதரவாளர்களுக்கம், பிற மீன் விற்பனையாளர்களுக்கும் இடையே பயங்கர மோதல் மூண்டது. இதில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் ஒரு கடை எரிந்து சாம்பலானது.
மதுரை நெல்பேட்டையில் மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் பிஎஸ் அப்துல் காதர் தரப்பை சேர்ந்த ஏராளமானோர் கடை அமைத்துள்ளனர்.
கொலை வழக்கில் கைதாகி சிறையிலிருந்த இப்ராகிம் என்பவர், சில மாதங்களுக்கு முன்பு இங்கு கடை அமைத்தார். இவர், இமாம் அலியின் கூட்டாளி ஆவார். இதற்கு அப்துல் காதர் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், கழிப்பறை, குடிநீரை பயன்படுத்துவதில் இருதரப்பினரிடையே பிரச்னை வெடித்தது. இது தொடர்பாக 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் இப்ராகிம் தரப்பை சேர்ந்த ஜாபர் என்பவரின் கடை மீது சிலர் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் கடை முழுவதும் எரிந்து சாம்பலானது.
இதையடுத்து அப்துல் காதர் தரப்பினர் கடையை திறந்த போது இப்ராகிம் ஆதரவாளர்கள் உள்ளே புகுந்து கடையை அடித்து நொறுக்கினர். மோதலில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக் கொண்டதால் அப் பகுதியில் பதற்றம் நிலவி வருகின்றது. இதனால் அங்கு 100 -க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மோதலில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவி வருகிறது. இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.