என்.எல்.சி. தொழிலாளர் போராட்டம்: பிரதமரைச் சந்திக்கும் தமிழக எம்பி, எம்எல்ஏக்கள்!
சென்னை: நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் மற்றும் போராட்டங்கள் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து மனு கொடுக்கிறார்கள் தமிழக எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள்.
இதுகுறித்து பா.ம.க. மாநில இணைப் பொதுச்செயலாளர் வேல்முருகன் எம்.எல்.ஏ. கடலூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், "என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் பிரச்சினைக்காக பல போராட்டங்கள் நடத்தியும் என்.எல்.சி. நிர்வாகம் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரவில்லை.
உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், தொழிலாளர் நலத்துறை வலியுறுத்தியும் கூட நிர்வாகம் பிடிவாதம் காட்டுகிறது. ஆகவே, அனைத்து கட்சிகளும் ஒன்று கூடி முடிவெடுத்து, நாளை கடலூர் மாவட்டத்தில் பொது வேலை நிறுத்தம் நடத்துகிறோம்.
அன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை வியாபாரிகள், பொதுமக்கள், டிரைவர்கள் தாமாகவே முன்வந்து, 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களின் துயரத்தில் பங்கேற்று, போராட்டத்தை வெற்றிபெற செய்ய வேண்டும் என அனைத்து கட்சிகள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இந்தப் போராட்டத்தில் அத்தியாவசியப் பணிகள் பாதிக்காதவாறு சுய கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும் என அனைத்துத் தரப்புக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வோம், அடையாள அட்டையை பறிப்போம் என என்.எல்.சி நிறுவனம் மிரட்டுவது சட்டவிரோதமானது. தொழிற்சங்க தலைவர்களை காவல்துறையினர் மிரட்டுவதும் கண்டனத்துக்குரியது.
தொழிலாளர்களின் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.
பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், வருகிற 21-ந் தேதி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் குழுவினர் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய நிலக்கரித்துறை மந்திரி ஆகியோரை சந்தித்து மனு கொடுக்கிறோம்.
இதில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் செம்மலை, ஆனந்தன், தம்பித்துரை, அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த சின்னசாமி ஆகியோரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி டி.கே.ரெங்கராஜன் தலைமையில் 3 எம்.பி.க்களும், இந்திய கம்யூனிஸ்டு குருதாஸ் குப்தா தலைமையில் 3 எம்.பி.க்களும், பா.ம.க. சார்பில் நானும் கலந்து கொள்கிறோம்," என்றார்.