சென்னை பஸ்களைக் குண்டு வைத்துத் தகர்ப்போம்-மர்ம நபர் மிரட்டல்
சென்னை: சென்னை நகர அரசுப் போக்குவரத்துக் கழக பஸ்களை வெடிகுண்டு வைத்துத் தகர்ப்போம் என்று கூறி மிரட்டல் தொலைபேசி அழைப்பு வந்ததால்,பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், சென்னையில் ஓடும் அரசு நகரப் பேருந்துகளை குண்டு வைத்துத் தகர்ப்போம். ஆனால் எப்போது, எப்படி குண்டு வெடிக்கும் என்பது தெரியாது என்று கூறியுள்ளார்.
இதையடுத்து கட்டுப்பாட்டு அறை போலீஸார் விசாரணையில் குதித்தனர். எந்த எண்ணிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது என்பதை ஆராய்ந்தனர். அப்போது அது ஒரு செல்போன் என்பது தெரிய வந்தது.
அந்த எண் வியாசர்பாடி,எஸ்.ஏ காலனியில் வசிக்கும் விக்னேஷ் என்பவரின் முகவரியில் இருந்தது. இதையடுத்து விக்னேஷை அழைத்து போலீஸார் விசாரித்தனர். அவரது தாயாரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது விக்னேஷின் தாயார் போலீஸாரிடம் கூறுகையில், எனது மகன் ஒரு பெண்ணைக் காதலித்தார். ஆனால் அதில் எனக்கு உடன்பாடில்லை. தொடர்ந்து அந்தப் பெண்ணுடன் செல்போனில் பேசி வந்ததால் ஆத்திரமடைந்து செல்போனை வாங்கி அதில் இருந்த சிம் கார்டைப் போட்டு உடைத்து விட்டேன் என்று கூறினார்.
ஆனால் உடைக்கப்பட்ட சிம் கார்டிலிருந்து எப்படி பேசியிருக்க முடியும் என்று தெரியாமல் போலீஸார் குழப்பமடைந்துள்ளனர்.
இதனால் தொடர்ந்து விக்னேஷ் மற்றும் அவரது தாயாரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications