அடுத்த டிஜிபி யார்?-யுபிஎஸ்சிக்கு 26ம் தேதி பரிந்துரைப் பட்டியல் அனுப்புகிறது அரசு
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அடுத்த டிஜிபியைத் தேர்வு செய்வது தொடர்பான பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. அக்டோபர் 26ம் தேதிக்குள் டிஜிபிக்களின் பெயர் அடங்கிய பரிந்துரைப் பட்டியலை யுபிஎஸ்சிக்கு தமிழக அரசு அனுப்பி வைக்கவுள்ளது.
லத்திகா சரணை டிஜிபியாக நியமித்ததில் உச்சநீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை. அப்பட்டமான விதி மீறல் நடந்துள்ளது. எனவே டிஜிபியாக லத்திகா சரண் தேர்வு செய்யப்பட்டது செல்லாது. புதிய டிஜிபியை தேர்வு செய்ய வேண்டும். அதுவரை லத்திகா சரண் நீடிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறி விட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதி்மன்றம் போனது தமிழக அரசு. ஆனால் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. மேலும் இதை அவசர வழக்காக கருதி விசாரிக்கவும் அது மறுத்து விட்டது.
இதையடுத்து தற்போது புதிய டிஜிபி தேர்வுக்கான பணிகளை தொடங்கியுள்ளது தமிழக அரசு. முதல் கட்டமாக பரிந்துரைப் பட்டியலை அது யுபிஎஸ்சிக்கு அனுப்பவுள்ளது.
தமிழகத்தில் தற்போது டிஜிபி அந்தஸ்தில், ஆர்.நட்ராஜ், விஜயக்குமார், லத்திகா சரண், போலோநாத், திலகவதி ஆகியோர் உள்ளனர். இவர்களில் நட்ராஜ்தான் சீனியர் ஆவார். அடுத்த இடத்தில் விஜயக்குமார் வருகிறார். இவர் தற்போது சிஆர்பிஎப் தலைவராக செயலாற்றி வருகிறார். 3வது இடத்தில் இருப்பவர் லத்திகா சரண். அடுத்த இடத்தில் இருப்பவர் போலோநாத். கடைசி இடத்தில் இருப்பவர் திலகவதி.
இந்த ஐந்து பேரையும் பரிந்துரைப் பட்டியலில் குறிப்பிட்டு யுபிஎஸ்சிக்கு அனுப்பி வைக்கவுள்ளது தமிழக அரசு. வருகிற 26ம் தேதிக்குள் இந்தப் பட்டியல் அனுப்பப்பட்டு விடும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications