கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட சேகர்பாபு ஆதரவாளர்கள் ஜெ. வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்
சென்னை: கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ. பி.கே.சேகர்பாபுவின் ஆதரவாளர்கள் இன்று கட்சிப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வீடு முன்பு ஆயிரக்கணக்கில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வட சென்னை மாவட்ட அதிமுக செயலாளராக இருந்து வந்த பி.கே.சேகர்பாபு சமீபத்தில் கோஷ்டிப் பூசலை வளர்ப்பதாக கூறி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இவர் அவைத் தலைவர் மதுசூதனின் உறவினர் ஆவார்.
அதேபோல வளர்மதியும் சமீபத்தில் கட்சிப் பொறுப்பிலிருந்து தூக்கப்பட்டார். சேகர்பாபு நீக்கம் குறித்து கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் விரிவாக விளக்கியிருந்தார் ஜெயலலிதா.
இந்த நிலையில், கட்சியின் வட சென்னை பகுதி வட்ட செயலாளர்கள், பகுதி செயலாளர்கள் பலரும் தூக்கப்பட்டுள்ளனர். இதனால் பரபரப்பாக காணப்படுகிறது அதிமுக வட்டாரம்.
இந்த நிலையில், பகுதி செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ஷாகுல் அமீது (எழும்பூர்), வீரமணி (திரு.வி.க.நகர்), கொளத்தூர் கணேஷ் (கொளத்தூர்), சரவணகுமார் (துறைமுகம்), இளைஞரணி மாவட்ட செயலாளர் பழனி ஆகியோர் இன்று ஜெயலலிதாவை சந்தித்து மனு கொடுக்க போயஸ்கார்டன் வந்தனர். அவர்களுக்கு ஆதரவாக சுமார் 2 ஆயிரம் தொண்டர்கள் போயஸ் கார்டனில் திரண்டனர்.
இதையடுத்து பின்னி ரோடு சந்திப்பில் இருந்து ஜெயலலிதா வீட்டிற்கு செல்லும் வழியில் இரும்பு தடுப்பு வேலி அமைத்து போலீசார் அவர்களை தடுத்தனர். நேரம் செல்ல, செல்ல அங்கு கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது.
அப்போது அ.தி.மு.க. வினர் தடுப்பு வேலியையும் மீறி ஜெயலலிதா வீட்டை நோக்கி ஓடினர். அவர்களை போலீசார் ராகவவீரா அவென்யூ சந்திப்பில் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள் காப்பாற்று, காப்பாற்று வடசென்னை அ.தி.மு.க.வை காப்பாற்று. காப்பாற்று, காப்பாற்று அம்மா விசுவாசிகளை காப்பாற்று என்று கோஷமிட்டனர்.
இதையடுத்து ஷாகுல்அமீது, கொளத்தூர் கணேஷ், சரவணகுமார், பழனி ஆகியோர் மட்டும் உள்ளே வந்து மனு கொடுக்கலாம் என போயஸ்கார்டனிலிருந்து தகவல் வந்தது. இதையடுத்து இவர்கள் மட்டும் ஜெயலலிதா வீட்டுக்குள் சென்று தனித் தனியாக மனு அளித்தனர்.
அதில்,
நாங்கள் பல ஆண்டுகளாக கட்சிக்கு விசுவாசமாக உழைத்து வருகிறோம். எங்கள் மீது இதுவரை எந்த புகாரும் இல்லை. எங்களை திடீரென கட்சியில் இருந்து நீக்கிவிட்டனர். எங்கள் குறைகளை மனுவாக எழுதி கொடுத்துள்ளோம். கட்சி உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம் என்று கூறியுள்ளனராம்.












Click it and Unblock the Notifications