முன்னாள் எம்.ஏல்.ஏ. தம்பி கொலை வழக்கு-மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை
விளாத்திகுளம்: விருதுநகர் மாவட்டம் விளாத்திகுளத்தில் முன்னாள் எம்எல்ஏ தம்பியை அடித்து கொலை செய்த வழக்கில் அவரது மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து விரைவு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
விளாத்திகுளம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ குமரகுருபர ராமநாதன். இவரது தம்பி ராஜராஜன் (42). நிலக்கிழாரான இவர் அப் பகுதியில் திமுக கிளை செயலாளராக இருந்தார்.
இவரது வீட்டில் அதே ஊரை சேர்ந்த கமால் என்பவரது மகன் ஷாஜஹான்(24) என்பவர் சிறு வயது முதலே ராஜராஜன் மனைவியான கிருஷ்ணகுமாரியிடம் டியூசன் கற்று வந்ததோடு, டிராக்டர் டிரைவராகவும் பணியாற்றியுள்ளார். இதனால் அவர்களுக்குள் பழக்கம் இருந்துள்ளது.
இந்த நிலையில் ஷாஜஹான் கடந்த 21.9.09 அன்று இரவு ராஜராஜனை மது அருந்த அழைத்து சென்றுள்ளார். அங்குள்ள தரிசு நிலத்திற்கு சென்றதும் அவரை சரமாரியாக கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார்.
மேலும் ரத்தகறை படிந்த அவரது சட்டையை கிருஷ்ணகுமாரியிடம் கொடுத்து துவைத்து தர சொல்லியுள்ளார். அவரும் அதனை துவைத்து கொடுத்துள்ளார்.
இது குறித்து விளாத்திகுளம் போலீசார் கொலைக்கு காரணமான இருவரையும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கு தூத்துக்குடி முதலாவது விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது.
குற்றவாளிகள் ஷாஜஹான் மற்றும் கிருஷ்ணகுமாரிக்கு தலா ஒரு ஆயுள் தண்டனையும் தலா ஆயிரம் அபராதமும் விதித்தார், மேலும் தடயத்தை மறைக்க முயன்றதற்காக ஷாஜஹானுக்கு மேலும் ஆயிரம் அபராதமும் விதித்து நிதிபதி மேரி அன்சலம் தீர்ப்பு வழங்கினார்.