திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா கொண்டாட்டம்: 11-ம் தேதி சூரசம்ஹாரம்
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா கோலாகலமாகத் துவங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் புகழ் பெற்ற கோவில்களில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலும் ஒன்று. இங்கு கந்தசஷ்டி திருவிழா கடந்த சனிக்கிழமை அன்று துவங்கியது. இது தொடர்ந்து 6 நாட்களுக்கு நடக்கிறது.
திருவிழாவின் 2-ம் நாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை நடந்தது.
பின்பு 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், யாக சாலை பூஜை நடந்தது. கோவில் மூலவர் மற்றும் சண்முகருக்கு உச்சிகால பூஜை நடந்தது. யாக சாலையில் சுவாமி ஜெயந்திநாதருக்கும் உச்சிகால பூஜை நடைபெற்றது.
இதனையடுத்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி - தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி சண்முக விலாச மண்டபம் வந்தார். அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அப்போது அங்கு ஆயிரக்கணக்கில் திரண்டு இருந்த பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பினர்.
மாலையில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி - தெய்வானையுடன், திருவாடுதுறை ஆதின கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது.
இரவில் வள்ளி, தெய்வானை அம்பாளுடன், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தங்க ரதத்தில் சுவாமி எழுந்தருளினார். கிரி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இந்த வருடம் கந்தசஷ்டி திருவிழா தொடங்கிய முதல் நாளில் இருந்தே ஏராளமான பக்தர்கள் வந்து வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications