வீரபாண்டி ஆறுமுகத்தை பதவி நீக்கம் செய்யக் கோரி 18ல் சேலத்தில் ஆர்ப்பாட்டம்: ஜெ
சென்னை: விவசாயத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை பதவி நீக்கம் செய்யக் கோரி வரும் 18ம் தேதி சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம், தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் துறை ஆய்வாளர் குப்புராஜ் உட்பட அவரது குடும்பத்தினர் 6 பேர் சொத்து தகராறு காரணமாக, கடந்த ஆகஸ்ட் மாதம் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்தக் கொலை வழக்கில் சேலம் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவரும், பனமரத்துப்பட்டி திமுக ஒன்றியச் செயலாளரும், வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகனுமான சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றக் காவலில் சிறையில் உள்ள சுரேஷ்குமாரை, அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சிவப்பு சுழல் விளக்கு பொருத்தப்பட்ட, தேசிய கொடியுடன் கூடிய அரசு வாகனத்தில் சேலம் மத்திய சிறைச் சாலைக்குச் சென்று சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
ஓர் அமைச்சர், குற்றவாளியை சிறையில் சென்று சந்தித்து ஆறுதல் வார்த்தைக் கூறுவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானதோடு மட்டுமல்லாமல், உண்மைக் குற்றவாளியை வழக்கிலிருந்து விடுவிக்க துணை போவது போலவும் அமைந்துள்ளது என தெரிவித்து நான் கண்டன அறிக்கை வெளியிட்டேன்.
வீரபாண்டி ஆறுமுகத்தின் செயலைக் கண்டித்து நான் அறிக்கை வெளியிட்டவுடன், குற்றவாளியை சந்தித்து ஆறுதல் கூறியதற்கான விளக்கத்தை அளிக்காமல், “நான் அரசு காரில் செல்லவில்லை, சொந்த காரில் தான் சென்றேன்" என்ற விளக்கத்தை ஒரு பத்திரிகைக்கு அளித்து இருக்கிறார் வீரபாண்டி ஆறுமுகம். அமைச்சரின் இந்தக் கூற்றும் பொய் என என்னால் சுட்டிக்காட்டப்பட்டது.
எனவே, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக குற்றவாளியை சிறையில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை உடனடியாக பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்காத முதல்வர் கருணாநிதியைக் கண்டித்தும், வீரபாண்டி ஆறுமுகத்தை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் 18ம் தேதி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அதிமுக சார்பில் அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.