பெண்கள் கர்ப்பப் பையை கழற்றி வைத்து விட்டு வேலைக்கு வர வேண்டுமா?-அமைச்சருக்கு மாதர் சங்கம் கேள்வி

பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு பெண்களை நியமிக்கும் திட்டம் இல்லை என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என். நேரு கூறியிருந்தார். இந்த வேலைக்கு அவர்கள் பொருத்தமற்றவர்கள் என்றும் கூறியிருந்தார். இதற்கு அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.அமிர்தம், பொதுச் செயலாளர் உ. வாசுகி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில்,
போக்குவரத்துக் கழகங்களில் பெண்களை ஓட்டுநர், நடத்துநர்களாக எடுக்கும் திட்டம் இல்லை என்று சட்டமன்றத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் கூறியதாக, பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது.
பணியில் சேர்ந்த உடன் மாற்று பணி கோருகின்றனர், 3 மாத காலம் பிரசவ கால விடுமுறை கேட்கின்றனர், இவ்வாறு விடுமுறை வழங்குவது சாத்தியமில்லை, இந்த பணி இயல்புக்கு இது சரிப்பட்டு வராது என அமைச்சர் கே.என். நேரு கருத்து தெரிவித்துள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது.
போக்குவரத்துத்துறை பணி என்றால், பெண்கள் கர்ப்பப்பையை கழற்றி வைத்து விட்டு வரவேண்டும் என்று அமைச்சர் எதிர்பார்க்கிறாரா ?
மூன்று மாத பிரசவ கால விடுப்பு என்பது, தொழிற்சங்கங்கள் போராடிப் பெற்ற உரிமை. அது பெண் உழைப்பாளிகளுக்குக் கிடைத்துள்ள சட்ட ரீதியான அங்கீகாரமாகும்.
இது போன்ற உரிமைகளை நிலை நாட்டுவதில், அரசு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டுமே தவிர, தொழிற்சங்க உரிமைகளைக் கோடாரி கொண்டு வெட்டக் கூடாது.
மாற்றுப்பணி கோருபவர்களுக்கு, இயல்பாக சில பிரச்சனைகள் இருக்கலாம். அதற்கான தீர்வு காணலாம். அதை செய்வதை விட்டு விட்டு, அவர்களைப் பணிக்கே அமர்த்த மாட்டேன் என்பது, அரசியல் சட்டத்திற்கு எதிரானது.
அமைச்சர் கே.என். நேரு தனது வார்த்தைகளை வாபஸ் பெற வேண்டும். மேலும், இதில் தமிழக அரசின் நிலை என்ன என்பதை முதல்வர் கருணாநிதி விளக்க முன்வர வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்துகிறது என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications