சென்னையில் தொடரும் கடத்தல் சம்பவங்கள்-ஜார்க்கண்ட் இளைஞர் கடத்தல்
சென்னை: சென்னையில் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவதை கவலை அளிக்கும் விஷயமாக மாறி வருகிறது. நேற்று ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கொரியர் நிறுவன ஊழியர் கடத்தப்பட்டுள்ளார்.
சென்னையில் சமீபத்தில் கீர்த்திவாசன் என்ற மாணவன் கடத்தப்பட்டு பின்னர் அதிரடியாக மீட்கப்பட்டான். அதற்கு முன்பு சில கடத்தல் சம்பவங்கள் அரங்கேறின. இந்தநிலையில் நேற்று முன்தினம் தொழிலதிபர் ஒருவரின் மகன் கடத்தப்பட்டு திருவள்ளூரில் விடப்பட்டார்.
இந்த நிலையில் கிண்டியில் தனியார் கொரியர் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பரத் என்ற 22 வயது இளைஞர் கடத்தப்பட்டுள்ளார்.
நேற்று இரவு 10 மணியளவில் அசோக் பில்லர் அருகே கொரியர் நிறுவனத்தின் வேனில் பரத் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் கொரியர் வேனை முந்திச் செல்ல முயன்றது. இதனால் வேன் டிரைவருக்கும், காரில் இருந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
நடுரோட்டில் வண்டியை நிறுத்தி இரு தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென காரில் இருந்த 6 பேரும் சேர்ந்து பரத்தை குண்டு கட்டாக காரில் தூக்கி போட்டனர். பின்னர் அவரை காரில் கடத்திச் சென்றனர்.
இதனால் மற்ற ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள கொரியர் நிறுவனத்துக்கு நிறுவனத்துக்கு சென்ற அவர்கள் பரத் கடத்தப்பட்ட தகவலை தெரிவித்தனர்.
இதுகுறித்து நள்ளிரவு 12 மணியளவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதைக் கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
கடத்திச் செல்லப்பட்ட பரத்துக்கு இந்தி மட்டுமே தெரியும். முந்திச் செல்வதில் ஏற்பட்ட தகராறில்தான் பரத் கடத்தப்பட்டுள்ளார் என்றும் கடத்தியவர்கள் அவரை எங்காவது இறக்கி விட்டுச் சென்றிருப்பார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
பரத் எங்கிருக்கிறார். அவரை கடத்தியவர்கள் யார்? என்பது பற்றிய எந்த விவரமும் இதுவரை தெரியவில்லை.












Click it and Unblock the Notifications