விதிகளை மீறி வாங்கிய நிலங்களை திருப்பிக் கொடுக்க எதியூரப்பா குடும்பம் முடிவு

இந்த நிலங்களை வாங்கியதில், அனைத்து விதிகளையும் எதியூரப்பா கடுமையாக மீறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது மகன்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் இந்த நிலத்தை தருவதற்காக அத்தனை விதிகளையும் எதியூரப்பா மீறியுள்ளதும் தெரிய வந்துள்ளது.
மும்பை ஆதர்ஷ் நில ஊழலை விட இது மிகப் பெரிய ஊழலாக விஸ்வரூபம் எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஊழலால் எதியூரப்பாவின் மூத்தமகனும், பாஜக எம்.பியுமான ராகவேந்திராதான் பெரும் பலன் அடைந்துள்ளார்.
இந்த பெரும் ஊழலால் பாஜகவுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதேசமயம், ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் ஊழலை பெரிதாக்கி நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்து வரும் பாஜகவுக்கு சரியான பதிலடியாக இதை கையில் எடுத்துள்ளது காங்கிரஸும், மதச்சார்பற்ற ஜனதாதளமும்.
2006ம் ஆண்டு துணை முதல்வராக எதியூரப்பா இருந்தபோதுதான் இந்த ஊழல் நடந்துள்ளது. அப்போது ராகவேந்திராவும், அவரது தம்பி விஜயேந்திராவும் நிலத்தை வாங்கியுள்ளனர். அந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ. 500 கோடியாகும். ஆனால் அதை அடிமாட்டு விலைக்கு தனது மகன்கள் வாங்க விதிகளை மீறி நடந்து கொண்டுள்ளார் எதியூரப்பா.
பெங்களூரின் மிகவும் ஆடம்பரமான பகுதியான ஆர்எம்வி விரிவாக்கப் பகுதியில், பெங்களூர் வளர்ச்சி ஆணையத்தின் மனை ஒன்றை ராகவேந்திரா வாங்கினார். இதை வெறும் 10 லட்சம் ரூபாய்க்கு அவர் வாங்கியுள்ளார். ஆனால் அதன் உண்மையான மதிப்பு ரூ. 2 கோடியாகும்.
இதேபோலத்தான் விஜயேந்திராவும், எதியூரப்பா குடும்ப உறுப்பினர்கள் பிறரும் அடிமாட்டு விலைக்கு அரசு நிலத்தை வாங்கியுள்ளனர்.
ஆனால் இதில் எந்தத்தவறும் இல்லை என்று ராகவேந்திரா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மக்கள் பிரதிநிதிகள் அரசு நிலத்தை வாங்குவது என்பது புதிதில்லை.அனைத்து மாநிலங்களிலும் நடப்பதுதான். நானும் அதே போலத்தான் பெற்றேன், இதில் விதி மீறல் ஏதும் இல்லை என்கிறார்.
ஆனால் பெங்களூர் வளர்ச்சி ஆணைய விதிப்படி, பெங்களூரில் சொத்துக்கள் வைத்திருப்போர், ஆணைய நிலத்தை வாங்க முடியாது. ஆனால் தனக்கு பெங்களூரில் சொத்துக்கள் ஏதும் இல்லை என்று பொய்யான ஆவணத்தை தாக்கல் செய்து நிலத்தை வாங்கியுள்ளார் ராகவேந்திரா என்பது அம்பலமாகியுள்ளது. இவருக்கு பெங்களூர் மன்யதா பகுதியில் சொந்தமாக ஒரு கட்டடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல கே.ஆர்.புரம் பகுதியில் தனது மருமகன் சோஹன் குமாருக்கு சாதகமாக, பெங்களூர் வளர்ச்சி ஆணையம் கையகப்படுத்திய நிலத்தை டினோட்டிபை செய்து உத்தரவிட்டுள்ளார் எதியூரப்பா.
இதுகுறித்து எதியூரப்பாவிடம் விளக்கம் கேட்டால், மக்களிடமிருந்து எடுத்த நிலத்தை மக்களிடமே கொடுப்பதில் என்ன தவறு என்று வித்தியாசமான பதிலை அளித்துள்ளார்.
இதுபோக தனது மகள் உமாதேவி ஒரு பிபிஓ அலுவலகம் அமைக்க பெங்களூர் புறநகர்ப் பகுதியில் 2 ஏக்கர் நிலத்தைக் கொடுத்துள்ளார் எதியூரப்பா. இதிலும் விதி மீறல் நடந்துள்ளாம்.
மேலும், சொந்த மாவட்டமான ஷிமோகா நகரில் ஒரு மருத்துவமனை கட்ட 5 ஏக்கர் நிலமும், பெங்களூரில் பேக்டரி அமைக்க 2 ஏக்கர் நிலத்தையும் தனது குடும்பத்தினருக்கு ஒதுக்கியதிலும் எதியூரப்பா விதி மீறலில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ரூ. 181 கோடி மதிப்புள்ள 11 ஏக்கர் நிலத்தையும் டினோட்டிபை செய்து தனது மகன்களுக்கு சாதகமாக நடந்துகொண்டுள்ளார் எதியூரப்பா.
இந்த ஊழல்கள் அனைத்தும் துணை முதல்வராக எதியூரப்பா இருந்தபோது நடந்துள்ளது. அப்போது முதல்வராக இருந்தவர், தற்போது இந்த ஊழல்களை வெளிக்கொணர்ந்து பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வரும் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சர்ச்சை பெரிதாகியுள்ளதைத் தொடர்ந்து அனைத்து நிலங்களையும் அரசிடமே ஒப்படைத்து விட எதியூரப்பா குடும்பம் முடிவு செய்துள்ளது.
எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் வகையில் இந்தமுடிவுக்கு எதியூரப்பா வந்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தை இன்று முதல்வர் கூட்டினார்.அதில், தன் மீதான புகார்களை விசாரிக்க உயர் மட்ட விசாரணை நடைபெறும் என்று அறிவித்தார். மேலும், நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்படவுள்ளது.
எதியூரப்பா விலக மாட்டார்: பாஜக
பெரும் நில ஊழலில் சிக்கியுள்ள எதியூரப்பா முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டார் என்று பாஜக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாஜக தரப்பில் கூறுகையில், ஆதர்ஷ் நில ஊழல் போன்றது அல்ல இது. தன் மீதான மாபெரும் ஊழல் புகார்களிலிருந்து தப்பிக்கவும், மக்களை திசை திருப்பவும் காங்கிரஸ் கட்சியினர் சாதாரண பிரச்சினையை பெரும் ஊழல் போல சித்தரிக்க முயல்கின்றனர். இதற்குப் பாஜக பணியாது, எதியூரப்பா விலக மாட்டார் என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications