சாமி எழுதிய கடிதங்களுக்கு பதில் போனதாக-பிரதமர் அலுவலகம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

இதனால் பிரதமர் அலுவலகத்திற்கு மேலும் நெருக்கடி அதிகமாகியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றம் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக ராஜா மீது வழக்கு தொடர அனுமதி தருவது தொடர்பாக 15 மாத காலம் பிரதமர் அமைதி காத்தது ஏன் என்று கடுமையான கேள்வியை விடுத்திருந்தது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறும் அது பிரதமர் அலுவலகத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் ஆஜராகி, சாமி அனுப்பி கடிதங்களுக்கு உரிய முறையில் பதில்கள் அனுப்பப்பட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து குறுக்கிட்ட சாமி, நான் பிரதமருக்கு 5 கடிதங்கள் எழுதினேன். ஆனால் ஒன்றுக்கு மட்டுமே பதில் வந்தது. அதேபோல ராஜாவுக்கு எழுதிய கடிதத்தில் ஒன்றுக்கு மட்டுமே பதில் வந்தது. அதேசமயம், நான் எழுதிய எந்தக் கடிதத்திற்கும் பிரதமரிடமிருந்து உரிய பதில்கள் வரவே இல்லை. உண்மையை மறைக்க பிரதமர் அலுவலகம் முயலுகிறது என்றார்.
இதையடுத்து பேசிய கோபால் சுப்ரமணியம், இதுதொடர்பான அனைத்து ஆவணங்களையும் கோர்ட்டில் தாக்கல் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இது மிகவும் சீரியஸான விவகாரம். உண்மை என்ன என்பது தெரிய வேண்டும். 2ஜி விவகாரம் தொடர்பாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை மிகக் கடுமையான குற்றச்சாட்டுக்கள். அதை சொலிசிட்டர் ஜெனரல், ராஜாவின் வக்கீல், சிபிஐ வக்கீல் ஆகியோர் முதலில் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
சாமிக்கும், பிரதமர் அலுவலகத்திற்கும் இடையிலான கடிதப் போக்குவரத்து குறித்த அனைத்து ஆவணங்களையும் ஒரு அபிடவிட்டாக வருகிற சனிக்கிழமைக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
இதுகுறித்த விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று உத்தரவிட்டனர்.
விசாரணைக்குப் பின்னர் வெளியில் வந்த சாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசு உண்மையை மறைக்க முயலுகிறது என்பது கோர்ட்டில் இன்று கிட்டத்தட்ட வெளிச்சத்திற்கு வந்தது. நான் எழுதிய கடிதங்களுக்கு பிரதமர் முறையாக பதில் தரவில்லை. இதுகுறித்து கோர்ட்டும்கேள்வி எழுப்பியது.
இதுகுறித்து சனிக்கிழமைக்குள் பதிலளிக்குமாறும், ஆதாரங்களை தாக்கல் செய்யுமாறும் அது உத்தரவிட்டுள்ளது. சனிக்கிழமை விடுமுறை என்பதால் நாளை மாலைக்குள் பிரதமர் அலுவலகம் தனது பதிலைத் தாக்கல் செய்ய வேண்டும்.
அப்போது கோர்ட்டுக்கு தவறான தகவலை பிரதமர் அலுவலகம் கொடுத்ததா அல்லது பிரதமர் உண்மையை மறைக்க முயலுகிறாரா என்பது வெளிச்சமாகி விடும்.
எனது கடிதத்திற்குப் பிரதமர் வெறுமனே வரப் பெற்றது என்பதை மட்டுமே பதிலாக அனுப்பியுள்ளார். எனது அடிப்படைக் கேள்வி என்னவென்றால், ராஜா மீது வழக்கு தொடர ஏன் அவர் அனுமதிக்கவில்லை என்பதே என்றார் சாமி.
காங். காரியக் கமிட்டி கூடுகிறது:
பிரதமருக்கு கடும் நெருக்கடிகள் அதிகரித்து வரும் நிலையில், 2ஜி விவகாரம் தொடர்பாக விவாதிக்க இன்று மாலை காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் கூடுகிறது.
இதில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸார் கலந்து கொண்டு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் எதிர்கட்சிகளை எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றி முடிவெடுக்கவுள்ளனர்.
நாடாளுமன்றம் மீண்டும் ஸ்தம்பிப்பு:
இதற்கிடையே, இன்றும் நாடாளுமன்றம் ஸ்தம்பித்து ஒத்திவைக்கப்பட்டது. லோக்சபா மற்றும் ராஜ்யசபா கூடியபோது 2ஜி விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
மாலையில் அமைச்சரவைக் கூட்டம்:
இந்த பரபரப்பான சூழலில் இன்று மாலை 6 மணிக்கு மேல் மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ளது.












Click it and Unblock the Notifications