தூத்துக்குடி அருகே 10 வயது பள்ளிச் சிறுமி கிணற்றி்ல் வீசி கொலை
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே காணாமல் போன 10 வயது சிறுமி கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் பிணமாக மிதந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் அருகே உள்ள ஆதனூரைச் சேர்ந்த வெள்ளத்துரை மகள் மொட்டையம்மாள்(10). இவர் பசுவந்தனை சரகம் கண்ணக்கட்டையில் உள்ள உறவினர் பாலகிருஷ்ணன் என்பவர் வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார்.
கடந்த 14-ம் தேதி பள்ளி சென்ற மொட்டையம்மாள் வீடு திரும்பவில்லை. இது குறித்து பசுவந்தனை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கண்ணக்கட்டை அருகே தளவாய்புரம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுமியின் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து பசுவந்தனை இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜட்சன் மற்றும் போலீசார் அங்கு சென்று சிறுமியின் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் அது காணாமல்போன மொட்டையம்மாள் என்பது தெரிய வந்தது. இந்த கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.