விஜயகாந்த்தால் நாடாள முடியும், மிரட்டலுக்கு பயப்பட மாட்டார்-எஸ்.வி.சேகர் பேச்சு
சென்னை: முதலில் பாஜக, பின்னர் அதிமுக, பிறகு திமுக ஆதரவு நிலை என்று மாறி மாறி பேசி வரும் நடிகரும், இன்னும் எம்.எல்.ஏ பதவியை விடாமல் தக்க வைத்துக் கொண்டிருப்பவருமான எஸ்.வி.சேகர் தற்போது விஜயகாந்த்தால் நாடாள முடியும், அவரது படத்தை தடுக்கப் போவதாக சொல்பவர்களை முறியடிப்பார், மிரட்டலுக்கெல்லாம் அவர் பயப்பட மாட்டார் என்று பேசியுள்ளார்.
மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏவான எஸ்.வி.சேகர், அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட பின்னர் திமுகவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். ஆனால் அங்கு நடந்தது என்னவோ தெரியவில்லை, சமீபத்தில் ராகுல் காந்தியைப் போய்ப் பார்த்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில் ராகுல் காந்தியை வெகுவாகப் புகழ்ந்து பேசினார். காங்கிரஸில் சேருவது குறித்து யோசித்து முடிவெடுப்பேன் என்றார்.
இந்த நிலையில் தற்போது விஜயகாந்த்துக்கு புகழாரம் சூட்டிப் பேசியுள்ளார். நாடாளும் தகுதி உடையவர் விஜயகாந்த் என்றும் கூறியுள்ளார்.
விஜயகாந்த் தானே நடித்து, இயக்கி வெளியிடப்போகும் விருதகிரி பட ஆடியோ வெளியீட்டு விழாவில்தான் இப்படிப் பேசினார் சேகர்.
இதுகுறித்து சேகர் கூறுகையில், தமிழக அரசியலை மாற்றி அமைக்கக்கூடிய சக்தி வாய்ந்த மிகப்பெரிய மக்கள் சக்தியை விஜயகாந்த் பெற்றிருக்கிறார். இந்தப் படம் எப்படி வெளியே வரும் பார்த்து விடலாம் என சவால் விட்டிருக்கிறார்கள். இதற்கு எல்லாம் பயப்படும் ஆள் அல்ல விஜயகாந்த்.
உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு தியேட்டர் கிடைக்கவில்லை. போஸ்டர் கூட ஒட்ட முடியவில்லை. இவற்றையெல்லாம் மீறி எம்.ஜி.ஆர். உலகம் சுற்றும் வாலிபனை வெளியிட்டார்.
அந்தப்படம் பெரிய வெற்றியை கொடுத்தது. விஜயகாந்த் படமும் வெற்றி வாகை சூடும். நாடாள முடியுமா என்று எம்.ஜி.ஆரைக் கேட்டார்கள். நாடாள முடியும் என நிரூபித்துக் காட்டினார் எம்.ஜி.ஆர். அதுபோல விஜயகாந்தும் நாடாளுவார் என்றார்.












Click it and Unblock the Notifications