மொபைல் போனில் இனி வினாடிகளில் பணப் பரிவர்த்தனை!
மொபைல் பேங்கிங் வாடிக்கையாளர்களுக்குப் புதிதில்லை என்றாலும், பல வாடிக்கையாளர்களுக்கு இதில் திருப்தியில்லை. நம்பகத் தன்மை இல்லாதது, தொழில் நுட்ப ரீதியாகப் புரியாதது மற்றும் வெளிப்படைத்தன்மை குறைவு என பல பிரச்சினைகள் இந்த மொபைலே பேங்கிங்கில்.
இதையெல்லாம் விட முக்கியப் பிரச்சினை, கால விரயம். ஒரு பரிவர்த்தனையை முடிப்பதற்குள் தலையைப் பிய்த்துக் கொள்ள வைப்பார்கள் மொபைல் பேங்கிஙம் வாடிக்கையர் சேவையாளர்.
இந்த தொல்லைகளை அனுபவிப்பவதற்குப் பதில், ஒரு நடை வங்கிக்கே போய் வந்துவிடலாம் என்ற எண்ணமே கடைசியில் மிஞ்சுவதால், மொபைல் பேங்கிங் என்பது இந்தியாவில் தோற்றுப்போன சிஸ்டமாகிவிட்டது.
அதற்கு உயிர் தரும் வகையில் துரிதமான மொபைல் பேங்கிங்கை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதனை என்.பி.சி.ஐ எனும் நிறுவனம் தொடங்கியுள்ளது.
இந்த சேவையை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போன் எண்ணை வங்கியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்யும் வாடிக்கையாளருக்கு 3 இலக்க ரகசிய எண் அளிக்கப்படும்.
ஒவ்வொரு வங்கிக்கும் தேசிய வங்கி அடையாள எண் அளிக்கப்படும். பணம் அனுப்புவோர் மற்றும் அதைப் பெறுவோர் இந்த எண்ணை தெரிந்திருக்க வேண்டும். அத்துடன் செல்போன் பண பரிவர்த்தனை எண்ணும் அளிக்கப்பட வேண்டும்.
இந்த 2 எண்களையும் சரியாக குறிப்பிட்டு பண பரிவர்த்தனை செய்தால் 7 விநாடிகளில் பணப் பரிமாற்றம் முடிந்துவிடுமாம். அந்த எண்ணை அழுத்துங்கள், இந்த எண்ணை அழுத்துங்கள், பிறந்த தேதியைச் சொல்லுங்கள், முகவரி சொல்லுங்கள் என்ற சிக்கல் இல்லாத, அதேநேரம் பாதுகாப்பான சேவை இது என்கிறார்கள்.
இப்போதைக்கு பாரத ஸ்டேட் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., எச்.டி.எப்.சி., யூனியன் வங்கி, எஸ் வங்கி, பாங்க் ஆப் இந்தியா, ஆக்ஸிஸ் வங்கி ஆகிய 7 வங்கிகள் இந்த சேவையை அளிக்க ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெற்றுள்ளன.
மேலும் 50 வங்கிகள் இந்த நெட்வொர்க்கில் இணையப் போகின்றனவாம். விரைவி்ல் நாடு முழுவதும் இந்த சேவை கிடைக்குமாம்.