தொழிற்சங்க தேர்தல்: திமுக-அதிமுக கடும் மோதல்-டிரைவர், கண்டக்டர்கள் லீவு- பஸ்கள் இயங்கவில்லை!
சென்னை: தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்க நிர்வாகத் தேர்தல் இன்று பரபரப்பாக நடந்தது. டிரைவர், கண்டக்டர்கள் ஓட்டு போடச் சென்றுவிட்டதால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் பஸ்கள் இயங்கவில்லை. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மிகக் கடும் போட்டி நிலவும் இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக உள்ளிட்ட 23 தொழிற் சங்கங்கள் இதில் போட்டியிடுகின்றன. ஆனாலும் திமுக-அதிமுக இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.
அதிமுகவுக்கு தேமுதிக தலைவர் விஜய்காந்தும் ஆதரவு தெரிவித்துள்ளதால் போட்டி கடுமையாகியுள்ளது. திமுகவுக்கு புதிய நீதி கட்சி ஆதரவு அளித்தது.
இந்தத் தேர்தலின் ஓட்டுப் பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியது. சென்னையில் 28 பணிமனைகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதில் டிரைவர்கள், கண்டக்டர்கள், மெக்கானிக்குகள், டிக்கெட் பரிசோதகர்கள், டிராபிக் இன்ஸ்பெக்டர்கள், கிளீனர்கள் என 23,000 போக்குவரத்து தொழிலாளர்கள் ஓட்டு போடுகின்றனர்.
இந்தத் தேர்தல் நடப்பதால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் பஸ்கள் இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்திருந்தது. ஆனால் பெரும்பாலான பஸ்கள் இயங்கவில்லை. இதனால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாயினர்.
இதனால் ஆட்டோக்களுக்கு கடும் டிமாண்ட் ஏற்பட்டது. ஷேர் ஆட்டோக்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பஸ்கள் இயங்காததால் சாலைகள் வெறிச்சோடின.
அதே போல மதுரை மாவட்டத்தில் போக்குவரத்து தொழிற்சங்க தேர்தல் 16 இடங்களில் நடந்தது. இதில் 8,000 பேர் வாக்களித்தனர். மேலும் சேலம், கோவை, திருச்சி, நெல்லை உள்பட மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இந்தத் தேர்தல் நடநத்து.
இதனால் அந்தப் பகுதிகளிலும் பல பஸ்கள் இயங்கவில்லை.
பணியில் இருக்கும் டிரைவர், கண்டக்டர்கள் சம்பந்தப்பட்ட டிப்போ அருகே பஸ்சை நிறுத்தி விட்டு ஓட்டு போட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், பெரும்பாலானவர்கள் விடுப்பு எடுத்துவிட்டதால் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications