குளச்சலில் ரத்த காயத்துடன் கரை ஒதுங்கிய டால்பின்: மீண்டும் கடலில் விட்ட கடலோர பாதுகாப்பு குழும போலீச
குளச்சல்: குளச்சல் கடற்கரையில் ரத்த காயத்துடன் டால்பின் கரை ஒதுங்கியது. அதை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மீட்டு மீண்டும் கடலில் விட்டனர்.
கேரளக் கடல் பகுதியில் இருந்து குளச்சல், சின்னமுட்டம் கடற்கரையோரமாக கடந்த சில நாட்களாக டால்பின் மீன்கள் கூட்டம் கூட்டமாக நகர்ந்து வருகின்றன.
குமரியில் சில கடலோரக் கிராமங்களில் கூட்டமாக இவ்வகை மீ்ன்கள் தென்படுகின்றன. இந்நிலையில் நேற்று ஒரு டால்பின் மீன் குளச்சல் கடலில் துறைமுக பாலத்தின் கீழ் காயத்துடன் கரை ஒதுங்கியது. அதை மீனவர்கள் ஏதோ பெரிய வகை மீன் என நினைத்து வடத்தில் கட்டி கரைக்கு இழுத்து வந்தனர். உடல் பகுதியில் சிராய்ப்பு ஏற்பட்டு ரத்த காயங்களுடன் காணப்பட்ட டால்பின் மீனை ஏராளமானோர் திரண்டு வேடிக்கை பார்த்தனர்.
குளச்சல் கடற்கரையில் காயத்துடன் கரை ஒதுங்கிய சுமார் 5 அடி நீளமும், 65 கிலோ எடையும் கொண்ட டால்பின் மீனை குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் தலைமையிலான போலீசார் மீட்டு மீண்டும் கடலில் விட்டனர்.
டால்பின் மீன்கள் கேரள மாநிலக் கடலில் இருந்து குமரி கடல் பகுதிக்கு அதிக அளவு வருவது குறித்து கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பறக்கை மீன் வள ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் ஒருவர் கூறுகையில்,
டால்பின் மீன்கள் வெப்ப மாறுத்தலுக்காவும், இனப்பெருக்கத்திற்காகவும் இடம் பெயருகின்றன. இவை 20, 50 என கூட்டமாகத் தான் செல்லும். மேலும், மற்ற டால்பின்கள் பின் தொடர்வதற்காக முன்பகுதியில் முந்திச் செல்லும் டால்பின்கள் ஒருவித சத்தத்துடன் அதிர்வலையை ஏற்படுத்தும்.
சில டால்பின்கள் கப்பல்கள், விசைப்படகுகள் போன்றவற்றில் அடிபட்டு காயம் அடைந்து கரை ஒதுங்குகின்றன. குளச்சலில் சிறுகாயத்துடன் டால்பின் மீன் கரை ஒதுங்கியிருப்பதால் அது விசைப்படகில் அடிப்பட்டிருக்கலாம் என அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications