மாஜி எம்எல்ஏ ரவிசங்கர் மீதான பணமோசடி வழக்கில் 30ம் தேதி தீர்ப்பு
நெல்லை: நெல்லை நீதிமன்றத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ரவிசங்கர் மீதான கூட்டுறவு வங்கி பணமோசடி வழக்கில் வரும் 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
விளாத்திகுளம் அருகேயுள்ள அரியநாயகிபுரத்தைச் சேர்ந்தவர் ரவிசங்கர். கடந்த 1996-ம் ஆண்டு விளாத்திகுளம் சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
விளாத்திகுளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவராகவும் இருந்தார். 1997-98ம் ஆண்டில் அந்த வங்கியில் ரூ. 18 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக ரவிசங்கர் மற்றும் வங்கி ஊழியர்கள் மீது தூத்துக்குடி வணிகவியல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் ரவிசங்கர் கைது செய்யப்பட்டார்.
கடந்த 2004-ம் ஆண்டு வழக்கு தொடர்பாக ரவிசங்கரை நெல்லை ஜேஎம்2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு போலீசார் அழைத்து சென்றனர். அப்போது அவர் போலீசாரை ஏமாற்றி வி்ட்டு தப்பியோடினார். இது குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரைத் தேடி வந்தனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னையில் ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் வருமானவரி அதிகாரி போல் நடித்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றபோது ரவிசங்கர் மீண்டும் போலீசாரிடம் சிக்கினார். சில நாட்களுக்கு முன் அவர் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சென்னை புழல் சிறையில் இருந்து நேற்று நெல்லை அழைத்து வரப்பட்ட ரவிசங்கர் கூட்டுறவு வங்கி பணமோசடி வழக்கு தொடர்பாக நெல்லை ஜேஎம் 2 நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கின் தீர்ப்பு வரும் 30-ம் தேதி அறிவிக்கப்படும் என மாஜிஸ்திரேட் ராபின்சன் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications