2வது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் நிதிஷ் குமார்
பீகார் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பெரும் வெற்றி பெற்றது நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி. இக்கூட்டணி 2வது முறையாக இன்று பொறுப்பேற்றது.
பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
துணை முதல்வராக சுஷில் குமார் மோடி பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக தலைவர்கள் அத்வானி, நிதின் கத்காரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பீகார் எம்.எல்.ஏ.க்களில் 34 பேர் பெண்கள்:
இம்முறை சட்டசபைக்குத் தேர்வான 243 எம்.எல்.ஏக்களில் 34 பேர் பெண்கள் ஆவர். இதில் 24 பேர் ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணியைச் சேர்ந்தவர்கள். இந்தத் தேர்தலில் மொத்தம் 90 பெண்கள் போட்டியிட்டனர்.
அதே போல தேர்வான 243 எம்.எல்ஏ.க்களில் 141 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்று நேசனல் எலக்சன் வாட்ச் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
இதில் 85 எம்எல்ஏக்கள் மீது கொலை, கொள்ளை கற்பழிப்பு, ஆள் கடத்தல், பணமோசடி போன்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளன.