மொபைல் நம்பரை மாற்றாமல் சேவையை மட்டும் மாற்றும் வசதி-ஹரியாணாவில் துவக்கம்

செல்போன் நிறுவனங்கள் இன்று பெருமளவில் அதிகரித்து விட்டன. சேவையும் விரிவாகி விட்டது. ஒவ்வொரு நிறுவனமும் கடும் போட்டியில் முட்டி மோதிக் கொண்டுள்ளன. பல்வேறு சலுகைகளை சரமாரியாக அளித்து வருகின்றன.
நாம் வைத்திருக்கும் சேவையில் இல்லாத பல சலுகைகள் வேறு நிறுவனத்தில் இருக்கும்போது அதை அனுபவிக்க முடியாத நிலை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுகிறது. அப்படியே விரும்பினாலும் தற்போதைய சேவையை கைவிட்டு விட்டு புதிய சேவைக்கு மாற வேண்டும். அப்படி மாறும்போது நமது எண்ணை விட வேண்டியது வருகிறது. ஒரு எண்ணை பலருக்கும் கொடுத்து வைத்திருக்கும் நிலையில், அந்த எண்ணை விட்டு விடுவதால் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடுகிறது.
இந்தப் பிரச்சினையைத் தீர்க்க நமது எண்ணை மாற்றாமல் சேவையை மட்டும் மாற்றும் திட்டத்திற்கு மத்திய அரசு அடிகோலியுள்ளது. இந்த சேவையை என்றோ தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் செல்போன் சேவை நிறுவனங்கள் இடக்கு செய்து வந்ததால் காலதாமதமாகி விட்டது. இந்த சேவையை நேற்று ஒரு வழியாக மத்திய அரசு தொடங்கி வைத்துள்ளது.
முதல் கட்டமாக ஹரியானாவில் இதை கபில்சிபல் தொடங்கி வைத்தார். விரைவில் இது நாடு முழுவதற்கும் விரிவுபடுத்தப்படும்.
முதலில் 8 முன்னணி நிறுவனங்கள் இந்த சேவைக்கு உடன்பட்டுள்ளன. இந்த எட்டு நிறுவனங்களின் செல்போன் சேவையை பயன்படுத்துவோர், எண்ணை மாற்றாமல், சேவையை மாற்றிக் கொள்ளலாம். அப்படி மாறுவதற்கு குறைந்தது 3 மாதங்கள் வாடிக்கையாளராக இருக்க வேண்டியது அவசியம். மாற்றம் செய்வதற்கான கட்டணம் ரூ. 19 ஆகும்.












Click it and Unblock the Notifications