ராகுல் காந்தியின் கணக்குப் படி நடைபோடுகிறோம்-சொல்கிறார் கார்த்தி!
சென்னை: ராகுல் காந்தி குறித்து யாரும் தப்புக் கணக்குப் போட வேண்டாம். அவரையும், காங்கிரஸையும் பிரித்துப் பார்க்க முடியாது. நாளைய அரசியல் குறித்து கணக்குப் போடுகிறார் ராகுல் காந்தி. அவர் போடும் கணக்கின் அடிப்படையில்தான் நாங்கள் நடைபோடுகிறோம் என்று பேசியுள்ளார் கார்த்தி சிதம்பரம்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீ்ண்டும் பேச ஆரம்பித்துள்ளார் கார்த்தி சிதம்பரம். சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடந்த சோனியா காந்தியின் 64வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு கார்த்தி சிதம்பரம் பேசுகையில்,
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றபோது காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. ஆனால், சோனியா காந்தி 1998ல் தலைவராகப் பொறுப்பேற்றபோது மத்தியில் மட்டுமல்ல பல மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லை.
நன்றாக நடந்து வரும் நிறுவனத்தை லாபகரமாக நடத்ததுவதைவிட நஷ்டத்தில் இயங்கி வந்த நிறுவனத்தை லாபகரமாக நடத்துவதே சாதனை. எந்த அரசாங்கமும் செய்யாத வகையில் அடித்தட்டு மக்களுக்காக பல நல்ல திட்டங்களை அவர் நிறைவேற்றி வருகிறார். அவரது சாதனைகளை மக்களிடம் காங்கிரஸ்காரர்கள் பிரசாரம் செய்ய வேண்டும்.
பீகார் மாநில தேர்தல் முடிவுகளை வைத்து ராகுல் காந்தியின் திட்டம் தோல்வி அடைந்து விட்டது என்றெல்லாம் விமர்சனம் செய்கிறார்கள். பீகாரில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வென்றுள்ளது. 19 தொகுதிகளில் 2வது இடத்தையும், 95 தொகுதிகளில் 3வது இடத்தையும் பிடித்துள்ளது.
தனித்து போட்டியிட்டதன் மூலம், உண்மையான பலத்தை காங்கிரஸ் அறிந்து கொள்ள முடிந்தது. ஆனால், தேர்தலில் கூட்டணி வைத்திருந்தால் தேர்தல் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும். ராகுல் இன்றைய அரசியல் கணக்கு போடுபவர் அல்ல. எதிர்கால அரசியல் கணக்கு போடுகிறார்.
தமிழகத்தில் தனித்து போட்டியிட்டால் என்ன பலன் கிடைக்கும்? கூட்டணி வைத்து போட்டியிட்டால் என்ன பலன் என்ற கணக்கைப் போட்டு தான் நாங்கள் நடைபோடுகிறோம். தேர்தல் முடிவில் பூஜ்ஜியத்தை மட்டுமே கண்ட சிலர் நாங்கள் முதல்வராவோம் என ஆசைப்படும்போது, இந்தியா முழுவதும் ஆளும் காங்கிரஸ் ஏன் ஆசைப்படக் கூடாது? யாரும் தப்பு கணக்கு போட வேண்டாம். ராகுலையும், காங்கிரசையும் ஒதுக்கி விட்டு அரசியல் நடத்தவும் முடியாது என்றார் கார்த்தி.












Click it and Unblock the Notifications