மனைவி சந்தேகித்ததால் கணவன் தீக்குளிப்பு: கட்டிப்பிடித்ததால் மனைவியும் காயம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மனைவி தனது நடத்தையில் சந்தேகப்பட்டதால் கணவன் தீக்குளித்தார்.
திருவண்ணாமலை நகரம் புது வாணியங்குள தெருவைச் சேர்ந்தவர் ராஜா. காய்கறி வியாபாரி. அவரது மனைவி ரேகா. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
திடீர் என்று ரேகவுக்கு ராஜாவின் நடத்தையில் சந்தேகம் எழுந்துள்ளது. சந்தேகப் பேய் வீட்டில் நுழைந்ததால் நிம்மதி வெளியேறிவிட்டது. இதனால் அவர்கள் அடிக்கடி சண்டை போட்டுள்ளனர்.
சதா சண்டை என்றான பின் மனம் வெறுத்த ராஜா தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். கணவன் எரிவதைப் பார்த்த ரேகா அவரை காப்பாற்ற முயன்றார். அதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
இதையடுத்து கணவனும், மனைவியும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.