குஜ்ஜார்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர பிரதமர், சோனியாவுக்கு கோரிக்கை
ஜம்மு: ராஜஸ்தானில் குஜ்ஜார் சமுதாயத்தினர் நடத்தி வரும் போராட்டத்தில் தலையிட்டு சுமூகத் தீர்வு கண்டு முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த குஜ்ஜார் சமுதாய அமைப்பான பழங்குடியினர் ஆய்வு மற்றும் கலாச்சார பவுண்டேஷன் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அமைப்பின் செயலாளர் ஜாவித் ராஹி கூறுகையில், ராஜஸ்தானில் பழங்குடியினர் அந்தஸ்து தரக் கோரி குஜ்ஜார் சமுதாயத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்லனர். அவர்களது போராட்டத்திற்கு நாங்கள் முழு ஆதரவு அளிக்கிறோம். இந்த விவகாரத்தில் பிரதமர், சோனியா காந்தி ஆகியோர் தலையிட்டு தீர்வு காண முன்வர வேண்டும்.
ஜம்மு காஷ்மீர், இமாச்சல் பிரதேச மாநிலத்தில் இதேபோன்ற கோரிக்கையை நாங்கள் முன்வைத்து நீண்ட காலமாக அமைதி வழியில் வலியுறுத்தி வருகிறோம்.
இந்தியாவின் 12 மாநிலங்களில் குஜ்ஜார் சமுதாயத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு பிற பழங்குடியினருக்கு அளிக்கப்படும் உரிமைகள், சலுகைளை வழங்கி சம மரியாதையுடன் நடத்த வேண்டும். குஜ்ஜார்கள் தங்களது உரிமைகளைப் பெற மனித உரிமை அமைப்புகள் இணைந்து செயல்பட முன்வர வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications