ரூ. 24 கோடி வாட் வரி கட்ட விப்ரோவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு
பெங்களூர்: சாப்ட்வேர்களை மறு ஏற்றுமதி செய்தது தொடர்பாக ரூ. 24 கோடி வாட் வரியை இன்று மாலைக்குள் டெபாசிட் செய்ய வேண்டும் என விப்ரோ நிறுவனத்திற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாப்ட்வேர்களை மறு ஏற்றுமதி செய்ததற்கு வாட் வரி கட்டாமல் விட்டு விட்டது விப்ரோ. இதையடுத்து அதற்குரிய வாட் வரியைக் கட்ட வேண்டும் என வணிக வரி ஆணையம் விப்ரோவுக்கு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது விப்ரோ. இந்த வழக்கை டிசம்பர் 10ம் தேதி விசாரித்த உயர்நீதிமன்றம்,
வரித் தொகையில் 50 சதவீதத்தை கட்டி விட்டு, வணிக வரி ஆணையத்தில் அப்பீல் செசய்யுமாறும் அறிவுறுத்தியது. 2 வாரத்திற்குள் அப்பீல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் விப்ரோ இதைச் செய்யவில்லை. இதையடுத்து விப்ரோவின் வங்கிக் கணக்குகளை வணிக வரிகள் ஆணையம் முடக்கி வைத்தது. இதையடுத்து கர்நாடக உயர்நீதிமன்றத்தை மீண்டும் நாடியது விப்ரோ.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இன்று (29.12.2010) மாலைக்குள் ரூ. 24 கோடி வாட் வரியைக் கட்ட வேண்டும் என்றும், அதை வணிக வரிகள் ஆணையம் ஆய்வு செய்து தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேலும் இதுதொடர்பான விப்ரோவின் கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்து விட்டது.












Click it and Unblock the Notifications