சபரிமலை பக்தர்கள் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுரை
சென்னை: சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தற்போது பன்றிக் காய்ச்சல் நோயின் தாக்கம் எல்லா மாநிலங்களிலும் மிகுதியாக காணப்படுகிறது. இந்த நோயைக் கட்டுப்படுத்த தகவல் இயக்கம் சபரிமலை பக்தர்களிடையே நடத்திடவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள் (காய்ச்சல், இருமல், தும்மல், தொண்டைப்புண்) தென்பட்டால், சபரிமலை பயணத்தை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தல் வேண்டும்.
பயணத்தின்போது பக்தர்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பன்றிக் காய்ச்சல் நோய்க்கான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கேரள மாநிலத்தில், பக்தர்கள் பயணம் செய்யும்போது, காய்ச்சலுக்குரிய அறிகுறிகளினால் பாதிக்கப்பட்டால், அருகில் உள்ள கேரள அரசு மருத்துவமனைகள், சுகாதார மையங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளை அணுகி நோய்க்கான மாத்திரைகளை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், சபரிமலை பயணத்தின்போது கட்டுப்படுத்த முடியாத மக்கள் தொகையுடன் செல்ல வேண்டியதிருப்பதால், சபரிமலை பயணம் தொடங்குவதற்கு 2 அல்லது 3 வாரங்களுக்கு முன் பன்றிக் காய்ச்சல் நோய்க்கான தடுப்பு ஊசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று சபரிமலை செல்லும் பக்தர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications