திமுக - கோவை மாநகராட்சியைக் கண்டித்து இன்று கோவையில் அதிமுக ஆர்பாட்டம்
கோவை: கோவை மாநகராட்சியைக் கண்டித்தும், திமுக அரசைக் கண்டித்தும் இன்று கோவையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இந்த பணிகள் நிறைவு பெறவில்லை. பில்லூர் இரண்டாவது குடிநீர்த் திட்டப் பணிகளும் முடியவில்லை.
திடக்கழிவு மேலாண்மை திட்ட சுத்திகரிப்பு நிலையத்தை நஞ்சுண்டாபுரத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறாமல் கட்டியதால் இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.
மேலும், திட்டம் முறையாக நிறைவேற்றப்படாததால் திட்டத்தின் பயன் மக்களைச் சென்றடையவில்லை என்றும் புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது.
மாநகராட்சிப் பகுதிகளில் மின்சார ஒயர்களை பூமிக்கு அடியில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தி.மு.க. அரசு அறிவித்தது.மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு காலையில் சிற்றுண்டி வழங்கப்படும் என்று மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அது இன்றுவரை நிறைவேறவில்லை.
மாநகராட்சி நிர்வாகமும், தி.மு.க. அரசும், சொத்து வரி, வணிக வரி, குப்பை வரி, குடிநீர் வரி ஆகியவற்றை உயர்த்தப் போவதாக தெரிய வருகின்றது.
எனவே, கோவை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தி.மு.க. அரசைக் கண்டித்து இன்று கோவை செஞ்சிலுவைச் சங்கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications