நாளை டெல்லியில் ஜெகன் உண்ணாவிரதம்: ஆதரவாளர்களுடன் புறப்பட்டார்
ஹைதராபாத்: கிருஷ்ணா நதி நீர் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து விவசாயிகளுக்கு ஆதரவாக ஜெகன்மோகன் ரெட்டி நாளை டெல்லியில் உண்ணாவிரதம் இருக்கிறார்.
கர்நாடகா, மஹாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய 3 மாநிலங்களுக்கு இடையே கிருஷ்ணா நதி நீர் பங்கீடு தொடர்பாக நீண்ட காலமாக பிரச்சனை இருந்து வருகிறது.
இதற்கிடையே கிருஷ்ணா நதியின் குறுக்கே இருக்கும் அலமாட்டி அணையின் உயரத்தை அதிகரிக்க கர்நாடக அரசு முடிவு எடுத்தது. அதன்படி கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. கர்நாடக அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆந்திரா கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இது குறித்து கிருஷ்ணா நதி நீர் ஆணையத்திலும் புகார் செய்தது.
ஆனால் கிருஷ்ணா நதி நீர் ஆணையம் அலமாட்டி அணையின் உயரத்தை அதிகரிக்க கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்தது. அணை உயர்த்தப்பட்டால் ஆந்திர மக்களுக்கு கிடைக்கும் தண்ணீர் அளவு குறைந்து விடும். இதனால் விவசாயிகள் தான் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
எனவே, விவசாயிகளுக்கு எதிராக அமைந்துள்ள இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெகன்மோகன் ரெட்டி நாளை தலைநகர் டெல்லியில் உண்ணாவிரதம் இருக்கிறார். இதில் அவருக்கு ஆதரவாக உள்ள 25-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.
இந்த உண்ணாவிரதம் மேற்கொள்வதற்காக ஜெகன் நேற்று பிற்பகல் 2. 55 மணிக்கு தனது ஆதரவாளர்கள் மற்றும் சுமார் 1500 விவசாயிகளுடன் சிறப்பு ரயில் மூலம் டெல்லிக்கு புறப்பட்டார். அந்த ரயிலில் என்டிஆர் தெலுங்கு தேசம் தலைவர் லட்சுமி பார்வதி, நடிகர் நடிகர் ஜெயசந்தர், எம்.எல்.சி. ஜுபூடி பிரபாகர்ராவ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் ஜெகனுடன் சென்றனர்.
இந்த உண்ணாவிரதம் குறித்து ஜெகன் கூறியதாவது,
கிருஷ்ணா நதி நீர் ஆணையத்தின் இந்த தீர்ப்பால் ஆந்திராவுக்கு தான் பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே, இதை எதிர்த்து நாளை டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கவிருக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications