கூடிப் பொங்கலிட்டு கொண்டாடிக் களித்திடுவீர்-கருணாநிதி வாழ்த்து

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை தொடங்குகிறது. நாளை முதல் நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. 15ம் தேதி தைப் பொங்கல் திருநாள் வருகிறது. 16ம் தேதி மாட்டுப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் வருகிறது. இதையொட்டி முதல்வர் கருணாநிதி பொங்கல் வாழ்த்து வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை
-எனும் அரிய தமிழ்ப் பண்பாடு போற்றி அறுவடைத் திருநாளாகத் தை முதல் நாளன்று பொங்கல் திருநாள் தமிழகம் முழுதும் கொண்டாடப்படுகிறது.
தனித் தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலை அடிகளார் தலைமையில் 1921-ஆம் ஆண்டில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 500க்கு மேற்பட்ட தமிழ்ச் சான்றோர் கூடி மேற்கொண்ட முடிவினை ஏற்று, “தைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கும் நாள்" என 2008ஆம் ஆண்டில் இந்த அரசு சட்டம் இயற்றியது. அதனைத் தொடர்ந்து, “தமிழ்ப் புத்தாண்டு -பொங்கல் திருநாள்" எழுச்சியோடும், ஏற்றத்தோடும் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டில் வரும் 15.1.2011 அன்றும், தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் திருநாளை, முந்தைய ஆண்டுகளைவிட மேலும் சிறப்பாகக் கொண்டாடிட வேண்டுமென தமிழக மக்களை கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்ப் புத்தாண்டு நாளாகிய பொங்கல் திருநாளில் தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும், வாயில்கள் தோறும் வண்ணக் கோலங்களிடுவீர்! வீடுகளிலும், வீதிகளிலும் மாவிலைத் தோரணங்கள் கட்டிடுவீர்! பொது இடங்களில் வண்ணத் தோரணங்கள் மின்னட்டும்! தென்னை, வாழை, கமுகு, ஈச்ச மரங்களின் குலைகள் குலுங்கட்டும்! தோகை விரிந்த கரும்புகள், இஞ்சி, மஞ்சள் கொத்துக்கள் இன்னபிற எல்லாம் சேர்ந்து எழில் கூட்டட்டும்!
அரசு வழங்கிய பச்சரிசி, வெல்லம், பாசிப் பருப்பு, முந்திரி, ஏலம், திராட்சை சேர்த்து ஆடவர், மகளிர், அருமைச் சிறார், குடும்பத்தார் நண்பர்கள் கூடிப் பொங்கலிட்டுக் கொண்டாடிக் களித்திடுவீர்!
குடியிருப்புகள்தோறும் கோலப் போட்டிகள், வீரவிளையாட்டுகள், கிராமப்புற நடனங்கள், கும்மி கோலாட்டங்கள் இதர கலைநிகழ்ச்சிகள் எல்லாம் ஏற்பாடு செய்திடுவீர்! விருதுகளும் பரிசுகளும் வழங்கி ஊக்கமளித்து மகிழ்ந்திடுவீர்!
வீடுகளின் முகப்புகளில் மாலையில் வரிசைவரிசையாய் விளக்குகள் ஏற்றி, வீதியெங்கும் ஒளிக்கதிர் பாய்ச்சிடுவீர்! அதுமட்டுமல்லாமல், அரசுக் கட்டடங்கள், பூங்காக்கள், பாலங்கள் போன்ற பொதுவிடங்கள் அனைத்தும் பொலிவுபெற வண்ண வண்ணமாய்ச் சரவிளக்குகள் அமைத்து அணி செய்திடுவீர்!
உறவினர்கள், நண்பர்கள் அனைவருடனும் வாழ்த்துகள் பரிமாறி தமிழ்ப் புத்தாண்டு - பொங்கல் திருநாளைத் தமிழகமெங்கும் மட்டிலா மகிழ்ச்சியோடும் மனம் பொங்கும் எழுச்சியோடும் கொண்டாடுவீர்!
அரசியல், சாதி, மத, இன வேறுபாடுகளின்றி உழைப்பைப் போற்றி எல்லோரும் இணைந்து கொண்டாடும் இந்த இனிய தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் திருநாளை ஆங்காங்கேயுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், ஆசிரியப் பெருமக்கள், அரசுசார் நிறுவனங்களின் அலுவலர்கள், நல்லுள்ளம் கொண்ட சான்றோர்கள், தமிழ் நெஞ்சங்கள், பொதுமக்கள் என யாவரும் ஒருங்கிணைந்து இந்த வேண்டுகோளை நிறைவேற்றித் தந்திடுவீர்! என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications