கெய்ரோ வந்தார் எல்பராதே-அதிபர் முபாரக்குக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்பு
கெய்ரோ: ஐ.நாவின் சர்வதேச அணு சக்தி நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், எகிப்தில் நடந்து வரும் ஜனநாயகப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளவருமான முகம்மது எல்பராதே சொந்த நாட்டுக்குத் திரும்பியுள்ளார். அதிபர் ஹோஸ்னி முபாரக்குக்கு எதிரான போராட்டத்தில் அவரும் பங்கேற்கவுள்ளார்.
அவர் நேற்று கெய்ரோவில் வந்து இறங்கியதும் அவரைச் சுற்றி பெருந்திரளான மக்கள் கூடிவிட்டனர். அதிபர் முபாரக் கடந்த 30 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார். இதற்கு ஒரு முடிவு கட்டுவதற்காகத் தான் எகிப்து மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கடந்த மூன்று நாட்களாக நடந்து வரும் போராட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் உள்பட நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 7 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இந்நிலையில் எல்பராதே எகிப்து வந்துள்ளது அந்நாட்டு மக்களுக்கு உற்சாகம் அளிப்பதாக உள்ளது.
இது குறித்து நோபல் பரிசு பெற்றவரான எல்பராதே (68) கூறுகையில்,
நான் எகிப்தில் நடக்கும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வேன். இன்று மதிய தொழுகைக்குப் பின் நடக்கும் பேரணியிலும் கலந்து கொள்வேன். இது எகிப்திற்கு இக்கட்டான நேரம். நான் எகிப்து மக்கள் பக்கம் இருக்கவே வந்துள்ளேன்.
நாட்டில் கலவரம் வெடிப்பதை எந்த எகிப்தியரும் விரும்பமாட்டார்கள். இனி திரும்பி செல்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. அரசு வன்முறையை கைவிடும் என்று நான் நம்புகிறேன். நான் இந்த மாற்றங்களை ஒழுங்கான மற்றும் அமைதியான வழியில் ஏற்படுத்த விரும்புகிறேன். அரசும் அவ்வாறே செய்யும் என்று நம்புகிறேன்.
முபாரக் 30 ஆண்டுகாலம் நாட்டுக்கு சேவை செய்துவிட்டார். இது அவர் ஓய்வு பெற வேண்டிய நேரம் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications