கூட்டணி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை-விஜயகாந்த்
மதுரை: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
மதுரை திருமங்கலம் அருகே, காங்கேய நத்தத்தில் விஜயகாந்தின் குல தெய்வமான வீர சின்னம்மாள் கோவில் உள்ளது. அரசியலில் முக்கிய முடிவுகளை அவர் எடுக்கும் முன் இங்கு அவர் சாமி தரிசனம் செய்வது வழக்கம். நேற்று காலை விஜயகாந்த் தனது மனைவி பிரமேலதா, மகன்களுடன் கோவிலுக்கு வந்தார்.
அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடந்தன. தரிசனத்தை முடித்துவிட்டு மதுரை புறப்பட்ட அவரிடம் நிருபர்கள், தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்று குறித்து கேட்டதற்கு, ஆண்டுக்கு ஒருமுறை குல தெய்வம் கோவிலுக்கு வருவது வழக்கம். அதற்காக தான் வந்தேன். தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. முடிவு செய்தால் தெரியப்படுத்துவேன் என்றார்.
பின்னர் திருப்பரங்குன்றம் சென்ற அவர் மாலையில் விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
மதுரையில் இருந்தபோது விஜயகாந்தை திமுக தென் மண்டல பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியின் சார்பில் திமுக மாவட்டச் செயலாளர் சந்தித்துப் பேசியதாகவும், விஜய்காந்தின் இந்த மதுரை பயணத்துக்கு முன்பே அவரது சகோதரியும் கணவரும் அழகிரியை சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
தேமுதிக வந்தால் தான் கொஞ்சமாவது வெற்றிக்கு வாய்ப்பு என்ற நிலையில் அதிமுக உள்ள நிலையில் விஜய்காந்தை அழகிரி தரப்பில் சந்தித்து என்ன பேசினர் என்று தெரியவில்லை. இதனால் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி வைக்குமா அல்லது தனித்துப் போட்டியிடுமா என்ற கேள்விக் குழப்பம் தொடர்கிறது.












Click it and Unblock the Notifications