எஸ் பேண்ட் அலைவரிசை ஒதுக்கீடு ரத்து - அமைச்சரவை பாதுகாப்புக் குழு அறிவிப்பு

இஸ்ரோவின் (இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்) எஸ்.பேண்ட் அலைவரிசை, கடந்த 2005-ம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த தேவாஸ் மல்டி மீடியா என்ற தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டது. இந்த ஒதுக்கீட்டுக்கான ஒப்பந்தத்தில் இஸ்ரோவின் விற்பனை பிரிவான ஆண்ட்ரிக்ஸ் என்ற அமைப்பு கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் படி ரூ.1,000 கோடி மட்டுமே அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தத்தில் ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக தலைமை கணக்குத் தணிக்கை அலுவலர் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது.
இதைத்தொடர்ந்து இந்த ஒப்பந்தம் பற்றி விண்வெளி கமிஷன் விசாரணை நடத்தி, தேவாஸ் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று, அமைச்சரவை பாதுகாப்பு கமிட்டிக்கு பரிந்துரை செய்தது.
இந்த பரிந்துரை படி, தேவாஸ் மல்டி மீடியா நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக மத்திய அமைச்சரவை பாதுகாப்பு கமிட்டி இன்று அறிவித்தது.
தேவாஸ் நிறுவனத்துக்கான இந்த ஒதுக்கீட்டில் ஏராளமான சட்டவிரோத முறைகேடுகள் இருப்பதாக அரசுக்கு தெரியவந்துள்ளதால் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்தக் குழு அறிவித்துள்ளது.
வழக்குத் தொடரும் தேவாஸ் நிறுவனம்!
அரசின் இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்துக்குப் போக முடிவு செய்துள்ளது தேவாஸ் நிறுவனம்.
இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆண்டிரிக்ஸ் அமைப்புக்கும் எங்களுக்கும் இடையே கையெழுத்தாகி இருக்கும் எஸ்.பேண்ட் அலைவரிசை ஒதுக்கீடு ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமானது. இதை ரத்து செய்ய முடியாது. ஒப்பந்தத்தின்படி எங்களுக்கு எஸ். பேண்ட் அலைவரிசை கிடைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இந்த ஒப்பந்தத்தை அரசு ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது. முழு தகவல்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை. ரத்து செய்யப்பட்டால், நாங்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவோம்", என்று அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications