ஓரிரு நாளில் 'முக்கிய' முடிவெடுக்கப் போகும் திண்டிவனம் ராமமூர்த்தி!!!
சென்னை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து தனக்கே தெரியாமல் நீக்கப்பட்ட திண்டிவனம் ராமமூர்த்தி சும்மா இருக்கப் போவதில்லையாம். ஓரிரு நாளில் ஏதுவது முக்கிய முடிவு எடுக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த முன்னாள் எம்.பி. திண்டிவனம் ராமமூர்த்தியை அதிமுக தரப்பு தூண்டிவிட, கட்சிக்கு எதிராக போர்க் கொடி எழுப்பினார். இதையடுத்து கட்சியை விட்டு கட்டம் கட்டப்பட்ட இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலையொட்டி தனிக் கட்சி தொடங்கினார், அதிமுக கூட்டணியில் 5 சீட் கொடுப்பார்கள் என்று நினைத்து.
ஆனால், அதிமுக கூட்டணிக்காக குண்டு கல்யாணம், பிந்து கோஷ் ஆகியோருடன் சேர்ந்து பிரச்சாரம் மட்டுமே செய்ய 'அரிய வாய்ப்பை' தந்தார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
இதையடுத்து அதிமுகவும் தோற்க, தனிக் கட்சியைக் கலைத்துவிட்டு மத்திய அமைச்சர் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். ஆளே இல்லாத இந்தக் கட்சியின் மாநிலத் தலைவராக்கப்பட்டார்.
இந் நிலையில் சமீபத்தில் டெல்லியில் சரத் பவாரை முதல்வர் கருணாநிதி சந்தித்துப் பேசிவிட்டு வந்த பின், திண்டிவனம் ராமமூர்த்திக்கே தெரியாமல் அவரது தலைமையிலான தமிழக கட்சியின் கிளை கூண்டோடு கலைக்கப்பட்டது.
இந்நிலையில் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து தனது சொற்ப ஆதரவாளர்களுடன் சென்னையில் நேற்று திண்டிவனம் ராமமூர்த்தி ஆலோசனை நடத்தினார். அதில், திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவது என்ற கட்சித் தலைவர் சரத்பவாரின் முடிவை எதிர்ப்பதாகவும் ராமமூர்த்தி தலைமையிலான நிர்வாகக் குழுவை கலைத்ததை ஏற்க முடியாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் ஒப்புதலுடன்தான் நாங்கள் அதிமுக அணிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தோம். மீனவர் பிரச்சனை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக மத்திய அரசைக் கண்டித்து நாங்கள் போராட்டம் நடத்தினோம். இதற்காக எங்களை சரத்பவார் பாராட்டினார்.
ஆனால், டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் கருணாநிதியை பவார் சந்தித்த பிறகு நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி கட்சியின் தமிழக கிளையை கலைப்பதாக மேலிடம் அறிவித்துள்ளது. இது குறித்து சரத் பவாரிடம் பேச முயன்றேன். அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை (போனை எடுக்கவில்லை).
பெரும்பாலான தொண்டர்கள் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதே சரி என்று கருதுகின்றனர்.
இதனால் தனி கட்சி தொடங்குவதா அல்லது வேறு என்ன செய்வது என்பது குறித்து ஓரிரு நாளில் முடிவு செய்ய இருக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications