2ஜி ஸ்பெக்ட்ரம் மோசடி-இன்று சிபிஐ முன் ஆஜராகும் பாஜக மாஜி மந்திரி அருண் ஷோரி
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி தொடர்பாக பாஜக முன்னாள் தொலைதொடர்பு துறை அமைச்சர் அருண் ஷோரி இன்று சிபிஐ விசாரணைக்கு ஆஜராகிறார்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் புன்னியவான் வேடம் போட்டு வரும் பாஜகவின் ஆட்சியில் தான் முதலில் வருபவர்களுக்கு முதலில் ஸ்பெக்ட்ரம் என்ற முறையும், வேண்டியவர்களுக்கு அதை ஒதுக்கித் தரும் முறைகேடும் ஆரம்பித்தன.
இந்த விஷயத்தில் மறைந்த பிரமோத் மகாஜன், அருண் ஷோரி ஆகியோர் மீதும் பெரும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந் நிலையில் அருண் ஷோரியை இன்று விசாரணைக்கு அழைத்துள்ளது சிபிஐ.
இந்த முறைகேடு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையிலான கமிட்டியும் பாஜக ஆட்சியில் தான் இந்த விவகாரத்தில் முறைகேடுகளுக்கு வித்திடப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால் இந்தக் கமிஷன் முற்றிலும் தவறாகவும், உண்மையை திரித்து கூறியுள்ளதாகவும் மத்திய அமைச்சர் கபில் சிபல், ராஜாவின் வக்கீல் போல் செயல்படுவதாகவும் அருண் ஷோரி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் அவர் இன்று விசாரணைக்கு ஆஜராகிறார்.
ஸ்பெக்ட்ரம் இழப்பீடு எவ்வளவு-டிராயிடம் சிபிஐ கேள்வி:
இந் நிலையில் கடந்த 2001ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்த சரியான தகவலை அளிக்கும்படி, தொலை தொடர்புத்துறை ஒழுங்கு முறை ஆணையத்திடம் (டிராய்) சிபிஐ கோரியுள்ளது.
ஸ்பெக்ட்ரம் உரிம கட்டணமாக 6.2 அலைவரிசைக்கு ரூ. 10,972 கோடியை டிராய் நிர்ணயித்துள்ளது. இந்தக் கட்டணம், கடந்த ஆண்டிலிருந்து அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், தொலைபேசி நிறுவனங்கள் அலைவரிசை லைசென்ஸ் கட்டணமாக ரூ. 1,658 கோடியையே இப்போது வரை செலுத்தி வருகின்றன.
இதனால் கடந்த 2001 முதல் 2008 வரை, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பீடு குறித்த சரியான தகவலை அளிக்கும்படி, டிராயிடம் சிபிஐ கோரியுள்ளது. இதற்காக ஒரு குழு அமைத்து விரைவில் அறிக்கை அளிக்குமாறு சிபிஐ கூறியுள்ளது.
11 நிறுவனங்கள் மீது குற்றப்பத்திரிகை-சிபிஐ திட்டம்:
இந் நிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் கொள்ளை லாபம் சம்பாதித்த 11 நிறுவனங்களிடம் அதிரடி விசாரணைக்கு சிபிஐ திட்டமிட்டுள்ளது. ஸ்வான், யுனிடெக், எஸ்-டெல், டேட்டா காம், ஐடியா, ஸ்பைஸ், சிஸ்டமா சிஸ்டம், லூப் டெலிகாம், டாடா, ஏர்செல், வோடோபோன் ஆகியவையே அந்த 11 நிறுவனங்கள்.
மேலும் ஏர்டெல், ரிலையன்ஸ் நிறுவனங்களையும் குறுக்கு விசாரணை செய்ய சிபிஐ திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications