மகனுக்காக கருணாநிதியிடம் ராமதாஸ் சரணாகதி-ராமூர்த்தி
சேலம் : வன்னியர் சமுதாயத்துக்காக, ராமதாஸ் எதையும் செய்யவில்லை. பா.ம.க. பாசமுள்ள மகன் கட்சியாக மாறிவிட்டது. ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக, ராமதாஸ் கருணாநிதியிடம் சரணடைந்துவிட்டார் என்று வன்னியர் சங்க கூட்டமைப்பு தலைவர் ராமமூர்த்தி குற்றம் சாட்டிள்ளார்.
இது குறித்து சேலத்தில், வன்னியர் சங்க கூட்டமைப்பு தலைவர் ராமமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
வன்னியர் சங்க கூட்டமைப்பு, வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஏழு முறை தமிழக முதல்வருக்கும், உள்துறை, தலைமைச் செயலர்களுக்கும் கோரிக்கை மனு அளித்துள்ளோம்.
ஆனால், தமிழக அரசு இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாமல், காலம் தாழ்த்திவிட்டது.இது குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடம் பேசிய போது, ஆட்சிக்கு வந்தால் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்துள்ளார். அதற்காக, வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வுக்கு ஆதரவு அளிக்கவிருக்கிறோம்.
நாங்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று அதிமுக கேட்டுக் கொண்டால், போட்டியிடுவோம். வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் மேற்கொண்டு, ஆட்சியில் அமர்த்துவோம்.
எங்களுக்கு தனி இட ஒதுக்கீடு தான் முக்கியம். ஒதுக்கீடு பெற்றால் மட்டுமே எங்களின் வருங்கால சந்ததியினர் பயன் பெறுவார்கள்.
வன்னியர் சமுதாயத்துக்காக ராமதாஸ் எதையும் செய்யவில்லை. தி.மு.க. கூட்டணியில் சேர்ந்துள்ள ராமதாஸ், ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக, பல எம்.எல்.ஏ. சீட்டுக்களை இழக்க உள்ளார்.
பா.ம.க. பாசமுள்ள மகன் கட்சியாக மாறிவிட்டது. ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக, ராமதாஸ் கருணாநிதியிடம் சரணடைந்துவிட்டார் என்றார்.
அப்போது வன்னியர் கூட்டமைப்பின் மாநில இளைஞர் சங்க தலைவர் சக்திவேலன், மாநகர அமைப்பாளர் பன்னீர் செல்வம் உள்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.












Click it and Unblock the Notifications