கோவை தனியார் கிளப்பில் செப்டிக் டாங்கில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி
கோவை: கோவை ஜென்னி கிளப்பில் உள்ள மனிதக் கழிவுகளை சுத்தம் செய்ய முயன்ற மூன்று பேர் விஷவாயு தாக்கி பரிதாபமாக பலியானார்கள்.
கோவை அவினாசி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது ஜென்னி கிளப். இங்குள்ள மனிதக் கழிவுத் தொட்டியை சுத்தம் செய்ய குமரன் என்டர்பிரைசஸ், சாய்ராம் என்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மனித கழிவுத் தொட்டி சுத்திகரிக்கும் பணி நடைபெற்றபோது, கோவை காமராஜபுரம் அசோக் (17), கார்த்திக் (21), ஆனந்த் (24) ஆகியோரை அழைத்துச் சென்று சுத்தம் செய்யுமாறு கூறியுள்ளனர்.
இதில், அடிமட்டத்தில் உள்ள கழிவுகளை சுத்தம் செய்ய ஒப்பந்ததாரர்கள் வற்புறுத்தலின் பேரில் கார்த்திக் என்ற இளைஞர் தொட்டிக்குள்ளே சுத்தம் செய்ய சென்றபோது மயங்கி விழுந்தார்.
அவரை காப்பாற்ற அசோக், ஆனந்த ஆகிய இருவர் தொட்டிக்குள் இறங்கிய போது அவர்களும் மயங்கி விழுந்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஒப்பந்ததாரர்களும், ஓட்டல் நிர்வாகத்தினரும் உடனே தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று அவர்களது உடலை மீட்ட போது அவர்கள் மூன்று பேரும் விஷ வாயு தாக்கி ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அவர்களது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர்.












Click it and Unblock the Notifications