இலவச கலர் டிவி கேட்டு அமைச்சர் பெரியசாமி வீடு முற்றுகை : போலீசார் சமாதானம்
திண்டுக்கல்: திண்டுக்கலில் இலவச கலர் டிவி கிடைக்க தாமதம் ஏற்பட்டதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அமைச்சர் ஐ. பெரியசாமியின் வீட்டை முற்றுகையிட்டனர்.
கடந்த 19-ம் தேதி முதல் திண்டுக்கல் நகராட்சி பகுதியில் இலவச கலர் டிவி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தெரிந்தவர்களுக்கும், டிவி சேதம் அடைந்தவர்களுக்கு மட்டும் தான் புதிய டிவி வழங்கப்படுகிறது என்று புகார்கள் எழுந்தன. இதைக் கண்டித்து 4 நாட்களாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் திண்டு்க்கலில் புதிய மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் இலவச கலர் டிவி வழங்கப்படும் என்றார்.
நேற்று திண்டுக்கல் நகராட்சி 7-வது வார்டில் டிவி வழங்குவதாகக் கூறப்பட்டு டோக்கனும் கொடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மக்கள் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் காலை 8 மணி முதல் காத்திருந்தனர். ஆனால் நகராட்சி ஊழியர்கள் யாரும் வரவும் இல்லை, டிவியும் வழங்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் அங்குள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீட்டை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாலைக்குள் கண்டிப்பாக டிவி வழங்கப்படும் என்று உறுதி அளித்ததையடுத்து கலைந்து சென்றனர். இதேபோன்று 29-வது வார்டு பெண்களும் டிவி கிடைக்காததால் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.












Click it and Unblock the Notifications