மூன்று சக்கர வண்டிகள் வழங்கிய திமுக வேட்பாளர் சேகர்பாபு மீது தேர்தல் விதிமீறல் வழக்கு
சென்னை: பொதுமக்களுக்கு மூன்று சக்கர வண்டிகள் வழங்கிய திமுக வேட்பாளர் பி.கே.சேகர் பாபு மீது தேர்தல் விதிமீறல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி கமிஷனருமான தா.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ரூ.15 லட்சம் பறிமுதல்:
சென்னையில் 16 சட்டசபை தொகுதிகளிலும் தேர்தல் விதிமுறை மீறல்களைக் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கென்று ஒவ்வொரு தொகுதிக்கும் துணை கலெக்டர் தலைமையில் பறக்கும் படைகள், காவல் துறை அதிகாரி மற்றும் ஆயுதம் தாங்கிய காவலர்கள் மற்றும் வீடியோ பதிவுகள் செய்யப்படுகின்றன. இந்த 16 பறக்கும் படைகளுடன் கூடுதலாக முக்கிய இடங்களை கண்காணிக்க 7 பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டு, தேர்தல் தொடர்பான பணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.
அண்ணாநகரில் நடந்த வாகனச் சோதனையின்போது உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தில் இருந்த ரூ. 15 லட்சத்து 39 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு, உடனடியாக வருமான வரித்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சேகர்பாபு மீது வழக்கு:
நேற்று முன்தினம் பறக்கும் படை வண்ணாரப்பேட்டையில் ஆய்வு நடத்தியபோது திமுக வேட்பாளர் பி.கே. சேகர் பாபு பொதுமக்களுக்கு 2 மூன்று சக்கர மீன்பாடி வண்டிகள் கொடுத்துள்ளது கண்டிபிடிக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த 2 மீன்பாடி வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பறக்கும் படைகள் சென்னையில் உள்ள தொகுதிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தேர்தல் விதிமீறல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான புகார் தெரிவிக்க விரும்புவோர் சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1800 425 2010, 1800 425 2011 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.












Click it and Unblock the Notifications